அபி இராவணன்

Friday, January 28, 2022

இராமாயணம் புதுப்பார்வை

இராமாயணம் படிப்பதும், ஆராய்வதும் அளவில்லாத ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் என்னுள் ஏற்படுத்துகிறது. என் தாத்தாவின் மூலம் இராமாயணத்தை முதலில் அறிந்து கொண்டேன். அந்த இராமாயணமே வேறு அதில் வரக்கூடிய இராமன், லட்சுமணன், அங்கதன், அனுமன், பரதன், சீதை, ராவணன் எல்லோருமே என் தாத்தாவின் வடிவத்திலேயே எனக்குக் காட்சியளித்தனர். அவர் சொல்லக் கூடிய கதைகள் என் சிறு வயதிலேயே எனக்கு ஒரு ஆர்வத்தையும் இராமாயணத்தின் மீது இனம்புரியாத ஓர் உறவையும் ஏற்படுத்திவிட்டது. டெல்லி  ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் இராமாயணத்தை ஆய்வுப் பொருளாகக் கொண்டு தமிழக வில்லுப்பாட்டு இராமாயணத்தைத் தாய்லாந்து ராமாயணத்துடன் ஒப்பிட்டு அதில் முனைவர் பட்டமும் பெற்றேன். பலர் எழுதிய இராமாயணம் தொடர்பான ஆய்வுகள் நூல்களில் சிலவற்றை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன் ஏ.கே.ராமானுஜம் எழுதிய முன்னூறு ராமாயணங்கள், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட பவுலா ரிச்மெண் தொகுத்த மெனி இராமாயணாஸ்,  மணவாளன் அவர்கள் எழுதிய ராம காதையும் இராமாயணங்களும், அ.கா.பெருமாள் அவர்கள் எழுதிய ராமன் எத்தனை ராமனடி  (நாட்டுப்புற ராமாயணம் கட்டுரைத் தொகுப்பு)களும்,  அதுமட்டுமல்லாமல் இவற்றிற்கெல்லாம் முன்பே எழுதப்பட்ட இராமாயண கருப்பொருள், ராமாயண நோட் போன்ற நூல்கள் மிக முக்கியமானவையாகும். 
 

இராமாயணம் என்ற பேர் இதிகாசம் நம் நாட்டினுடைய மிகப்பெரும் பேரிலக்கியம் என்று சொல்லி நாம் பெருமைப்படும் வகையில் நாம் ராமாயணத்தைப் புரிந்து கொண்டோமா அல்லது உள் வாங்கினோமா என்பது பெரிய வினாவாக இருக்கிறது. ராமாயணத்தை அதன் இயல்பை அப்படியே பார்க்காமல் பலர் தங்களது சூழ்ச்சிக்கு ஏற்ப அரசியல் லாபத்திற்கு ஏற்ப அதைப் பார்க்கிற ஒரு மனோபாவம் அதனுடைய உன்னதத்தை அதனுடைய பெருமையைத் தாழ்த்தி விடுகிறது. ராமாயணத்தை எந்த ஒரு அரசியல் பின்புலத்தில் நின்று வாசிக்காமல் இயல்பான அதன் போக்கிலேயே சென்று பார்த்தால் நமக்கு எண்ணிலடங்கா கதைகளையும் கிளைக் கதைகளையும் தன்னகத்தே கொண்டு மிகப்பெரும் ஒரு ஆச்சரியமாகத் திகழும். இன்றைய சூழலில் தவறானவர்களின் கைகளில் இராமாயணம் சிக்கித் தவிக்கிறது. அதனால் என்னவோ பலரும் இராமனையும் இராமாயணத்தையும் வெறுக்கவே செய்கின்றனர். இராமாயணத்தைப் படிப்பதும் ஏதோ தவறாக எண்ணப்படுகிறது. ஆய்வு உலக சூழலிலும் இதே நிலைதான். இன்றைய காலத்தில் தன்னை பெரும் பேராசிரியர் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட செவ்விலக்கியங்களில் ஆய்வு செய்வதோ அல்லது செவ்விலக்கிய சார்ந்த ஒரு படைப்பை மட்டுமே முன்னிறுத்துவது எப்படி ஒரு முழுமையான இலக்கிய ஆய்வாக ஒரு மொழியில் அமையும். அந்த மொழிகளில் இருக்கக்கூடிய பன்முகத்தன்மை கொண்ட பலவகையான இலக்கியங்களையும் பல்வேறு ஆய்வு பார்வைகள் மூலம் ஆராயும் ஒரு உயர்ந்த சிந்தனை இங்கு உருவாகாத பட்சத்தில் ஆய்வு வளர்ச்சி அதனுடைய பங்கு என்பது இன்னும் ஆரம்பித்த இடத்திலேயே நின்று போகக் கூடிய சூழலில் தான் இன்றைய பல்கலைக்கழகங்களும் ஆய்வுப் போக்குகளும் அமைந்துள்ளன. இப்படியான சூழலில் இராமாயணத்தைப் புரிந்துகொள்ள இராமாயணத்தைப் பற்றிய தேடல்களை முன்னெடுக்கின்ற அனைவருக்கும் நன்றி. தொடக்கத்தில் இராமாயணத்தைப் பற்றிய மிகப்பெரிய பார்வையை இன்று நேற்று அல்ல கம்பன் காலத்திலிருந்தே தொடங்கிவிட்டது. அவரவர் போக்கில் அவரவர் பார்வையில் இராமாயணங்கள் இந்த உலகத்தில் அறிமுகம் செய்து அவற்றிலும் குறிப்பாக நாட்டுப்புற இராமாயணங்கள், செவ்விலக்கிய ராமாயணங்கள் என்ற இரு நிலைகளிலும் இராமாயணத்தின் இடம் அளப்பரியது. வால்மீகி, கம்பன் எழுத்தச்சன், துளசிதாசர் இன்னும் எத்தனையோ படைப்பாளிகள் இராமாயணத்தை எடுத்து எழுதி தங்களுக்குப் பெருமை தேடிக் கொண்டனர் என்பது உண்மை. அதைப்போல இராமாயணத்தின் உண்மைத்தன்மையைத் தேடி ஆய்வுலகில் பொது தளத்திலும் தங்களுக்கான தனித்த இடத்தையும் பலரும் தக்க வைத்துக்கொண்டனர் என்பதும் உண்மை. வருங்கால தலைமுறையினர் இராமாயணத்தை காவி இலக்கியமாக பார்க்காமல் அதனை இலக்கியமாக ஆய்வுப் பொருளாகக் கொண்டு அதனுடைய பரந்துபட்ட பார்வையை மக்களின் பண்பாட்டை, மொழியை இன்னும் சொல்வதென்றால் இருக்கக்கூடிய எல்லாவற்றையும் நுணுகி ஆராய்ந்து வெளிப்படுத்துவார்கள் அதனுடைய தொடக்கம் தொடங்கி விட்டது.

No comments:

Post a Comment