அபி இராவணன்

Saturday, January 15, 2022

ஆர்.என்.ஜோ டி குருஸ் எழுதிய "யாத்திரை"

காலந்தோறும் சிந்தனை மாற்றமும் ஆன்ம தேடலும் புதிய வடிவங்களில் தொடர்ந்துகொண்டே வருகின்றன.
அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றவகையில் 
மனிதர்கள் தாங்கள் உணர்ந்துகொண்ட அல்லது அறிவுத் தேடலை அதன்வழி உணர்ந்த ஞானத்தை மற்றவர்களுக்கும் கடத்திவிட்டுப் போகிறார்கள். இயேசு, புத்தர் இவர்கள் வரிசையில் இன்னும் எத்தனையோ ஞானிகள், மகான்கள் தாங்கள் உணர்ந்ததை,  அல்லது தங்கள் அடைந்து ஞானத்தை இந்த உலக  உயிர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல நிலைகளில் வாழ்ந்து காட்டியும் பதிவு செய்தும் சென்றுள்ளனர். ஞானம் என்பது வெளி தேடுதல் அல்ல உள்முகத் தேடல் என்று கூறுவார்கள். அப்படியான ஒரு ஆன்ம விசாரணையை நாம் இந்த நாவலில் பார்க்கலாம். 
ஆர்.என்.ஜோ டி குருஸ் எழுதிய "யாத்திரை" என்ற நூல் பல நிலைகளில் நம் அறிவை நம் ஆன்ம சாளரத்தைத் திறக்கும் சாவியாக விளங்குகிறது. 

ஒரு நாவலில் அப்படி என்ன செய்துவிட முடியும்? இல்லை என்னதான் சொல்லிவிடமுடியும் ? என்ற வினா எழுவது இயல்பு. என் வாசிப்பு அனுபவத்தில் இப்படியான ஒரு நூலை இதற்கு முன் வாசித்தது இல்லை. 

வாழ்வின் எதார்த்தம், முன்னோர்கள் வழிபாட்டின் அவசியம், மிகப்பெரிய நிறுவனமாகிப் போன சமயம், அரசியல் மற்றும் ஆன்ம தேடல், உயிரின் ரகசியம் எனப் பலவிதமாக விரியும் தேடல்களின் பயணமாக இந்நூல் விளங்குகிறது. 

மனித அறிவுக்கு எட்டிய வரையில் எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்தி நாம் பரிசோதித்து அதில் சில வெற்றிகளை அடைந்தாலும், இன்னும் தொடமுடியாத தூரங்களை எண்ணிலடங்கா சூட்சமங்களைக் கற்பனைக்கு எட்டாத ஞான ஒளியைத் தொட்டுவிட முயலும் முயற்சி  தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  அதன் தொடர்ச்சி இந்நாவலில் காணலாம். இந்நாவலை வாசிக்கையில் வாசகனுக்கும் நாவலுக்கும் இடையில் நிகழும் ஒரு வேதியில் மாற்றம் அது அது என்ன என்று தெரியாமல் குழம்பும் மனநிலை  அந்த ரசவாதத்தைக் கண்டடையத் துடிக்கும் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் மிக எளிமையாக இதை உணர்ந்து கொள்ள முடியும். இந்நாவல் வெறுமனே கற்பனைகளும் சொற் குவியலாகவோ இல்லாமல் ஒரு கடலைப் போலப் பிரமாண்டமாகவும் ஆழமாகவும் அமைதியாகவும் காட்சி அளிக்கிறது. 
ஒரு எழுத்தாளனுக்கு அதுவும் இந்த உலகத்தில் இந்த சூழலில் இது எப்படிக் கைவரப் பெற்றது என்ற வியப்பும் ஆச்சரியமும் எழுவது இயல்புதான்.

எத்தனையோ கதைகளை வாசித்து இருந்தாலும் ஒரு உண்மையான சத்தியமான தன் வரலாற்று நூலை வாசிப்பது போன்ற ஓர் உணர்வு. 

ஒரு மனிதனின் கடந்தகால நிகழ்கால எதிர்கால நிலையை எப்படி இலக்கியத்தில் கொண்டுவரமுடியும் என்ற ஒரு பெரும் வினா என்னுள் எழுகிறது. எத்தனையோ மனிதர்கள் மண்ணில் தோன்றி நான் யார்? என்ற வினாவை எழுப்பி அதற்கான விடையாக மௌனத்தை அளித்துச் சென்றுள்ளனர். அந்த மௌனத்தின் உரையாக இந்நாவலை என்னால் பார்க்க முடிகிறது. 

சாதாரணமாக ஒரு எழுத்தாளனால் இப்படியான ஒரு படைப்பைக் கொண்டு வருவது சாத்தியமற்றது. அதிலும் குறிப்பாக இம்மாதிரியான படைப்புகளை வாசித்து அதில் கரைந்து போவது என்பதும் சாத்தியமற்றது. ஏனென்றால் இன்றைய சூழலில் மனிதனின் எதிர்பார்ப்பு லட்சியம் இவையெல்லாம் வேராக இருக்கிறது. இந்த நாவலை யாரால் உணர்ந்துகொள்ள முடிகிறதோ? அவர்கள் அனைவரும் படைப்பாளனின் மனநிலையோடு ஒத்தவர்களாகக் கருதிக் கொள்ளலாம்.

ஒரு வாசகன் அந்த படைப்பாளன் மனநிலையில் நின்று வாழ்ந்துவிட்டுச் செல்வது. வாசகனுக்குக் கிடைத்த பெரும்பேறு.

நாம் ஒரு எழுத்தாளன் ஆகிவிட முடியும் 
அரசியல்வாதி ஆகிவிட முடியும் தொழிலதிபராக ஆகிவிட முடியும் ஆனால் மனிதனாக இருப்பது கடினம்.

கடலோடிகள் வாழ்க்கையை அவர்கள் எதிர்கொண்ட இன்னல்களையும் சவால்களையும் மேலும், சமயத்தின் பெயரால் நிகழ்ந்த கொடுமைகள், அரசியல்வாதிகளின் போலி முகங்கள்  என தங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத சூழலில் அன்றாட பிழைப்பிற்கு உயிரைப் பணையம் வைத்து கடலுக்குள் சென்று வரும் இவர்களின் வாழ்க்கை எந்த வகையிலாவது உயர்ந்து விடாதா? அல்லது நாம் உயர்த்திவிட மாட்டோமா? என்ற ஏக்கம் கொண்டவனின் கதை. அவன் வாழ்நாள் முழுவதும் சிலுவையைச் சுமந்துகொண்டே போலி சமய அரசியலில் இருந்து சிக்காமல் வழிகளைத் தேடி அலையும் சாதாரண மனிதனாக இருக்கிறான். இந்த உலக வாழ்க்கையிலிருந்துகொண்டே 
(லவ் ஹிக 
வாழ்க்கையை வாழ்ந்துகொண்டே) இதைக் கடக்க நினைப்பது எவ்வளவு பெரிய மன உளைச்சலையும் வாழ்க்கைப்  போராட்டத்தையும் அவன் எதிர் கொள்கிறான் என்பதை எதார்த்தமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நாவல்.

உண்மையில் இந்த உலகம் ஒரு சிறை நாம் அனைவரும் சிறைவாசிகள். இந்த சிறையிலிருந்து விடுபட முதலில் நாம் நம் மனச் சிறையிலிருந்து விடுபட வேண்டும். நம் ஆன்மாவை எப்பொழுதும் உன்னதமானதாக பரிசுத்தமானதாக வைத்துக் கொள்ளப் பழக வேண்டும். அப்பொழுதுதான் உண்மையான மனித விடுதலை என்பது சாத்தியம் என்பதை ஒவ்வொரு பக்கத்திலும் மனதிற்குள் ஆணி அறைந்தார் போல் சொல்லிச் செல்கிறது. 

கடவுள் என்பது என்ன? அறிவு என்றால் என்ன? சமூகம் என்றால் என்ன? கற்பிதம் என்றால் என்ன? ஆன்மா என்றால் என்ன? இலக்கியம் என்றால் என்ன? வாழ்க்கை என்றால் என்ன? ஞானிகள் என்பவர்கள் யார்? ஆன்மாவை பார்ப்பது எப்படி? என பல கேள்விகளுக்கு விடையாகவும் இந்நாவல் விளங்குகிறது. 

ஒரே படைப்பில் ஆதரவாகவும் முரண்பாடாகவும் அந்த முரண்பாட்டிற்கு விளக்கமாகவும் மாறி மாறி நின்று விளக்குவது என்பது வானில் பல மாயசாலங்களைச் செய்யும் இந்திரசித்தின் அம்புகளைப் போல் படைப்பாளரின் படைப்பாளுமை திறன் இங்கு வெளிப்படுகிறது. 

எழுத்தாளர் ஆக விரும்புவோர். 
எழுத நினைக்கும் எவர்க்கும் ஒரு வழிகாட்டியாகவும். சமூகத்தில் எதை நாம் எழுத வேண்டும் ஏன் எழுத வேண்டும் அதன் அவசியம் என்ன? எழுத்தாளரின் பணி என்ன? இலக்கியத்தின் பணி என்ன? அது யாருடைய குரலாக இருக்க வேண்டும்? என்பதை உணர்ந்துகொள்ள நிச்சயம் இந்நூல் கைகொடுக்கும். 

No comments:

Post a Comment