Friday, January 28, 2022

இராமாயணம் புதுப்பார்வை

இராமாயணம் படிப்பதும், ஆராய்வதும் அளவில்லாத ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் என்னுள் ஏற்படுத்துகிறது. என் தாத்தாவின் மூலம் இராமாயணத்தை முதலில் அறிந்து கொண்டேன். அந்த இராமாயணமே வேறு அதில் வரக்கூடிய இராமன், லட்சுமணன், அங்கதன், அனுமன், பரதன், சீதை, ராவணன் எல்லோருமே என் தாத்தாவின் வடிவத்திலேயே எனக்குக் காட்சியளித்தனர். அவர் சொல்லக் கூடிய கதைகள் என் சிறு வயதிலேயே எனக்கு ஒரு ஆர்வத்தையும் இராமாயணத்தின் மீது இனம்புரியாத ஓர் உறவையும் ஏற்படுத்திவிட்டது. டெல்லி  ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் இராமாயணத்தை ஆய்வுப் பொருளாகக் கொண்டு தமிழக வில்லுப்பாட்டு இராமாயணத்தைத் தாய்லாந்து ராமாயணத்துடன் ஒப்பிட்டு அதில் முனைவர் பட்டமும் பெற்றேன். பலர் எழுதிய இராமாயணம் தொடர்பான ஆய்வுகள் நூல்களில் சிலவற்றை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன் ஏ.கே.ராமானுஜம் எழுதிய முன்னூறு ராமாயணங்கள், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட பவுலா ரிச்மெண் தொகுத்த மெனி இராமாயணாஸ்,  மணவாளன் அவர்கள் எழுதிய ராம காதையும் இராமாயணங்களும், அ.கா.பெருமாள் அவர்கள் எழுதிய ராமன் எத்தனை ராமனடி  (நாட்டுப்புற ராமாயணம் கட்டுரைத் தொகுப்பு)களும்,  அதுமட்டுமல்லாமல் இவற்றிற்கெல்லாம் முன்பே எழுதப்பட்ட இராமாயண கருப்பொருள், ராமாயண நோட் போன்ற நூல்கள் மிக முக்கியமானவையாகும். 
 

இராமாயணம் என்ற பேர் இதிகாசம் நம் நாட்டினுடைய மிகப்பெரும் பேரிலக்கியம் என்று சொல்லி நாம் பெருமைப்படும் வகையில் நாம் ராமாயணத்தைப் புரிந்து கொண்டோமா அல்லது உள் வாங்கினோமா என்பது பெரிய வினாவாக இருக்கிறது. ராமாயணத்தை அதன் இயல்பை அப்படியே பார்க்காமல் பலர் தங்களது சூழ்ச்சிக்கு ஏற்ப அரசியல் லாபத்திற்கு ஏற்ப அதைப் பார்க்கிற ஒரு மனோபாவம் அதனுடைய உன்னதத்தை அதனுடைய பெருமையைத் தாழ்த்தி விடுகிறது. ராமாயணத்தை எந்த ஒரு அரசியல் பின்புலத்தில் நின்று வாசிக்காமல் இயல்பான அதன் போக்கிலேயே சென்று பார்த்தால் நமக்கு எண்ணிலடங்கா கதைகளையும் கிளைக் கதைகளையும் தன்னகத்தே கொண்டு மிகப்பெரும் ஒரு ஆச்சரியமாகத் திகழும். இன்றைய சூழலில் தவறானவர்களின் கைகளில் இராமாயணம் சிக்கித் தவிக்கிறது. அதனால் என்னவோ பலரும் இராமனையும் இராமாயணத்தையும் வெறுக்கவே செய்கின்றனர். இராமாயணத்தைப் படிப்பதும் ஏதோ தவறாக எண்ணப்படுகிறது. ஆய்வு உலக சூழலிலும் இதே நிலைதான். இன்றைய காலத்தில் தன்னை பெரும் பேராசிரியர் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட செவ்விலக்கியங்களில் ஆய்வு செய்வதோ அல்லது செவ்விலக்கிய சார்ந்த ஒரு படைப்பை மட்டுமே முன்னிறுத்துவது எப்படி ஒரு முழுமையான இலக்கிய ஆய்வாக ஒரு மொழியில் அமையும். அந்த மொழிகளில் இருக்கக்கூடிய பன்முகத்தன்மை கொண்ட பலவகையான இலக்கியங்களையும் பல்வேறு ஆய்வு பார்வைகள் மூலம் ஆராயும் ஒரு உயர்ந்த சிந்தனை இங்கு உருவாகாத பட்சத்தில் ஆய்வு வளர்ச்சி அதனுடைய பங்கு என்பது இன்னும் ஆரம்பித்த இடத்திலேயே நின்று போகக் கூடிய சூழலில் தான் இன்றைய பல்கலைக்கழகங்களும் ஆய்வுப் போக்குகளும் அமைந்துள்ளன. இப்படியான சூழலில் இராமாயணத்தைப் புரிந்துகொள்ள இராமாயணத்தைப் பற்றிய தேடல்களை முன்னெடுக்கின்ற அனைவருக்கும் நன்றி. தொடக்கத்தில் இராமாயணத்தைப் பற்றிய மிகப்பெரிய பார்வையை இன்று நேற்று அல்ல கம்பன் காலத்திலிருந்தே தொடங்கிவிட்டது. அவரவர் போக்கில் அவரவர் பார்வையில் இராமாயணங்கள் இந்த உலகத்தில் அறிமுகம் செய்து அவற்றிலும் குறிப்பாக நாட்டுப்புற இராமாயணங்கள், செவ்விலக்கிய ராமாயணங்கள் என்ற இரு நிலைகளிலும் இராமாயணத்தின் இடம் அளப்பரியது. வால்மீகி, கம்பன் எழுத்தச்சன், துளசிதாசர் இன்னும் எத்தனையோ படைப்பாளிகள் இராமாயணத்தை எடுத்து எழுதி தங்களுக்குப் பெருமை தேடிக் கொண்டனர் என்பது உண்மை. அதைப்போல இராமாயணத்தின் உண்மைத்தன்மையைத் தேடி ஆய்வுலகில் பொது தளத்திலும் தங்களுக்கான தனித்த இடத்தையும் பலரும் தக்க வைத்துக்கொண்டனர் என்பதும் உண்மை. வருங்கால தலைமுறையினர் இராமாயணத்தை காவி இலக்கியமாக பார்க்காமல் அதனை இலக்கியமாக ஆய்வுப் பொருளாகக் கொண்டு அதனுடைய பரந்துபட்ட பார்வையை மக்களின் பண்பாட்டை, மொழியை இன்னும் சொல்வதென்றால் இருக்கக்கூடிய எல்லாவற்றையும் நுணுகி ஆராய்ந்து வெளிப்படுத்துவார்கள் அதனுடைய தொடக்கம் தொடங்கி விட்டது.

Saturday, January 15, 2022

ஆர்.என்.ஜோ டி குருஸ் எழுதிய "யாத்திரை"

காலந்தோறும் சிந்தனை மாற்றமும் ஆன்ம தேடலும் புதிய வடிவங்களில் தொடர்ந்துகொண்டே வருகின்றன.
அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றவகையில் 
மனிதர்கள் தாங்கள் உணர்ந்துகொண்ட அல்லது அறிவுத் தேடலை அதன்வழி உணர்ந்த ஞானத்தை மற்றவர்களுக்கும் கடத்திவிட்டுப் போகிறார்கள். இயேசு, புத்தர் இவர்கள் வரிசையில் இன்னும் எத்தனையோ ஞானிகள், மகான்கள் தாங்கள் உணர்ந்ததை,  அல்லது தங்கள் அடைந்து ஞானத்தை இந்த உலக  உயிர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல நிலைகளில் வாழ்ந்து காட்டியும் பதிவு செய்தும் சென்றுள்ளனர். ஞானம் என்பது வெளி தேடுதல் அல்ல உள்முகத் தேடல் என்று கூறுவார்கள். அப்படியான ஒரு ஆன்ம விசாரணையை நாம் இந்த நாவலில் பார்க்கலாம். 
ஆர்.என்.ஜோ டி குருஸ் எழுதிய "யாத்திரை" என்ற நூல் பல நிலைகளில் நம் அறிவை நம் ஆன்ம சாளரத்தைத் திறக்கும் சாவியாக விளங்குகிறது. 

ஒரு நாவலில் அப்படி என்ன செய்துவிட முடியும்? இல்லை என்னதான் சொல்லிவிடமுடியும் ? என்ற வினா எழுவது இயல்பு. என் வாசிப்பு அனுபவத்தில் இப்படியான ஒரு நூலை இதற்கு முன் வாசித்தது இல்லை. 

வாழ்வின் எதார்த்தம், முன்னோர்கள் வழிபாட்டின் அவசியம், மிகப்பெரிய நிறுவனமாகிப் போன சமயம், அரசியல் மற்றும் ஆன்ம தேடல், உயிரின் ரகசியம் எனப் பலவிதமாக விரியும் தேடல்களின் பயணமாக இந்நூல் விளங்குகிறது. 

மனித அறிவுக்கு எட்டிய வரையில் எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்தி நாம் பரிசோதித்து அதில் சில வெற்றிகளை அடைந்தாலும், இன்னும் தொடமுடியாத தூரங்களை எண்ணிலடங்கா சூட்சமங்களைக் கற்பனைக்கு எட்டாத ஞான ஒளியைத் தொட்டுவிட முயலும் முயற்சி  தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  அதன் தொடர்ச்சி இந்நாவலில் காணலாம். இந்நாவலை வாசிக்கையில் வாசகனுக்கும் நாவலுக்கும் இடையில் நிகழும் ஒரு வேதியில் மாற்றம் அது அது என்ன என்று தெரியாமல் குழம்பும் மனநிலை  அந்த ரசவாதத்தைக் கண்டடையத் துடிக்கும் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் மிக எளிமையாக இதை உணர்ந்து கொள்ள முடியும். இந்நாவல் வெறுமனே கற்பனைகளும் சொற் குவியலாகவோ இல்லாமல் ஒரு கடலைப் போலப் பிரமாண்டமாகவும் ஆழமாகவும் அமைதியாகவும் காட்சி அளிக்கிறது. 
ஒரு எழுத்தாளனுக்கு அதுவும் இந்த உலகத்தில் இந்த சூழலில் இது எப்படிக் கைவரப் பெற்றது என்ற வியப்பும் ஆச்சரியமும் எழுவது இயல்புதான்.

எத்தனையோ கதைகளை வாசித்து இருந்தாலும் ஒரு உண்மையான சத்தியமான தன் வரலாற்று நூலை வாசிப்பது போன்ற ஓர் உணர்வு. 

ஒரு மனிதனின் கடந்தகால நிகழ்கால எதிர்கால நிலையை எப்படி இலக்கியத்தில் கொண்டுவரமுடியும் என்ற ஒரு பெரும் வினா என்னுள் எழுகிறது. எத்தனையோ மனிதர்கள் மண்ணில் தோன்றி நான் யார்? என்ற வினாவை எழுப்பி அதற்கான விடையாக மௌனத்தை அளித்துச் சென்றுள்ளனர். அந்த மௌனத்தின் உரையாக இந்நாவலை என்னால் பார்க்க முடிகிறது. 

சாதாரணமாக ஒரு எழுத்தாளனால் இப்படியான ஒரு படைப்பைக் கொண்டு வருவது சாத்தியமற்றது. அதிலும் குறிப்பாக இம்மாதிரியான படைப்புகளை வாசித்து அதில் கரைந்து போவது என்பதும் சாத்தியமற்றது. ஏனென்றால் இன்றைய சூழலில் மனிதனின் எதிர்பார்ப்பு லட்சியம் இவையெல்லாம் வேராக இருக்கிறது. இந்த நாவலை யாரால் உணர்ந்துகொள்ள முடிகிறதோ? அவர்கள் அனைவரும் படைப்பாளனின் மனநிலையோடு ஒத்தவர்களாகக் கருதிக் கொள்ளலாம்.

ஒரு வாசகன் அந்த படைப்பாளன் மனநிலையில் நின்று வாழ்ந்துவிட்டுச் செல்வது. வாசகனுக்குக் கிடைத்த பெரும்பேறு.

நாம் ஒரு எழுத்தாளன் ஆகிவிட முடியும் 
அரசியல்வாதி ஆகிவிட முடியும் தொழிலதிபராக ஆகிவிட முடியும் ஆனால் மனிதனாக இருப்பது கடினம்.

கடலோடிகள் வாழ்க்கையை அவர்கள் எதிர்கொண்ட இன்னல்களையும் சவால்களையும் மேலும், சமயத்தின் பெயரால் நிகழ்ந்த கொடுமைகள், அரசியல்வாதிகளின் போலி முகங்கள்  என தங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத சூழலில் அன்றாட பிழைப்பிற்கு உயிரைப் பணையம் வைத்து கடலுக்குள் சென்று வரும் இவர்களின் வாழ்க்கை எந்த வகையிலாவது உயர்ந்து விடாதா? அல்லது நாம் உயர்த்திவிட மாட்டோமா? என்ற ஏக்கம் கொண்டவனின் கதை. அவன் வாழ்நாள் முழுவதும் சிலுவையைச் சுமந்துகொண்டே போலி சமய அரசியலில் இருந்து சிக்காமல் வழிகளைத் தேடி அலையும் சாதாரண மனிதனாக இருக்கிறான். இந்த உலக வாழ்க்கையிலிருந்துகொண்டே 
(லவ் ஹிக 
வாழ்க்கையை வாழ்ந்துகொண்டே) இதைக் கடக்க நினைப்பது எவ்வளவு பெரிய மன உளைச்சலையும் வாழ்க்கைப்  போராட்டத்தையும் அவன் எதிர் கொள்கிறான் என்பதை எதார்த்தமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நாவல்.

உண்மையில் இந்த உலகம் ஒரு சிறை நாம் அனைவரும் சிறைவாசிகள். இந்த சிறையிலிருந்து விடுபட முதலில் நாம் நம் மனச் சிறையிலிருந்து விடுபட வேண்டும். நம் ஆன்மாவை எப்பொழுதும் உன்னதமானதாக பரிசுத்தமானதாக வைத்துக் கொள்ளப் பழக வேண்டும். அப்பொழுதுதான் உண்மையான மனித விடுதலை என்பது சாத்தியம் என்பதை ஒவ்வொரு பக்கத்திலும் மனதிற்குள் ஆணி அறைந்தார் போல் சொல்லிச் செல்கிறது. 

கடவுள் என்பது என்ன? அறிவு என்றால் என்ன? சமூகம் என்றால் என்ன? கற்பிதம் என்றால் என்ன? ஆன்மா என்றால் என்ன? இலக்கியம் என்றால் என்ன? வாழ்க்கை என்றால் என்ன? ஞானிகள் என்பவர்கள் யார்? ஆன்மாவை பார்ப்பது எப்படி? என பல கேள்விகளுக்கு விடையாகவும் இந்நாவல் விளங்குகிறது. 

ஒரே படைப்பில் ஆதரவாகவும் முரண்பாடாகவும் அந்த முரண்பாட்டிற்கு விளக்கமாகவும் மாறி மாறி நின்று விளக்குவது என்பது வானில் பல மாயசாலங்களைச் செய்யும் இந்திரசித்தின் அம்புகளைப் போல் படைப்பாளரின் படைப்பாளுமை திறன் இங்கு வெளிப்படுகிறது. 

எழுத்தாளர் ஆக விரும்புவோர். 
எழுத நினைக்கும் எவர்க்கும் ஒரு வழிகாட்டியாகவும். சமூகத்தில் எதை நாம் எழுத வேண்டும் ஏன் எழுத வேண்டும் அதன் அவசியம் என்ன? எழுத்தாளரின் பணி என்ன? இலக்கியத்தின் பணி என்ன? அது யாருடைய குரலாக இருக்க வேண்டும்? என்பதை உணர்ந்துகொள்ள நிச்சயம் இந்நூல் கைகொடுக்கும். 

Saturday, January 1, 2022

சி.வை.தாமோதரம் பிள்ளை நினைவு தினம் இன்று - ஜனவரி 1, 1901


தமிழ்ப் பதிப்பு முன்னோடி சி.வை. தாமோதரம்பிள்ளை 
தமிழர்கள் தமது தொன்மைக்கான சான்றுகளாக எடுத்து முன்வைக்கும் இலக்கியங்களை அச்சுக்குக் கொண்டுவந்து பதிப்பாக வெளியிட்ட பெருமை ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை, உ.வே.சாமிநாதையர் ஆகியோரையே சாரும். 

இந்திய மொழிகளில் தமிழ் நூல் ஒன்றுதான் முதன்முதலாக அச்சாக்கம் பெற்றது என்பது வரலாறுகண்ட உண்மை; 1557 - ஆம் ஆண்டு கொல்லத்தில் அச்சேறிய தம்பிரான் வணக்கம் (Doctrina Christam) எனும் சிறு நூல் போர்ச்சுக்கீசிய மொழி நூல் ஒன்றின் தமிழாக்கம். அதை அடுத்து முறையான நூல் பதிப்பை செய்த காரணத்தால் சி.வை.தாமோதரம் பிள்ளை ‘பதிப்புத்துறையின் முன்னோடி’ என்று புகழ்ந்துரைக்கப்பட்டார்.  

யாழ்ப்பாணத்தில் சிறுப்பிட்டி என்ற ஊரில் 1832 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி பிறந்த சி.வை.தாமோதரம்பிள்ளை, வட்டுக்கோட்டை செமினறி பாடசாலையில் கல்வி கற்றார். அதேவேளை, சுன்னாகம் முத்துக் குமாரக் கவிராயரிடம் தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கண நூல்களை ஐயம் திரிபறக் கற்றுக் கொண்டார். இவருக்கு கணிதம், தத்துவம், வானவியல், அறிவியல் ஆகிய பாடங்களைக் கற்பித்த பெருமையை வட்டுக்கோட்டைக் கல்லூரி தனதாக்கிக் கொண்டது.

இந்த நிலையில், 1857 ஆம் ஆண்டு சென்னையில், மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. அன்றைய காலத்தில் கடல் கடந்து இந்தியா வந்த சி.வை.தாமோதரம் பிள்ளை, சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இளங் கலைப் பட்டப்படிப்பில் இணைந்ததோடு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டதாரியாக வந்தார். 

பதிப்புச் செம்மல் சி.வை.தாமோதரம் பிள்ளை
  ஆய்வாளர்கள் தமிழ் நூல்கள் பதிப்பு குறித்த காலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியை ஆறுமுக நாவலர் காலம் என்றும் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை தாமோதரம் பிள்ளையின் காலம் என்றும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கமான பகுதியை உ.வே.சாமிநாதய்யர் காலம் என்றும் அவர்கள் வகுத்துள்ளனர்.

சி.வை.தா.வின் பதிப்புகள் வெளிவந்த காலத்தில் பாரதியார் அவரது பதிப்பு களைப் படித்துள்ளார். பாரதியார் தனது சுயசரிதையையே 'சின்னசங்கரன் கதை' என்று புனைகதையாகப் படைத்தவர். அக்கதையில் ஓரிடத்தில் பாத்திரவாயிலாக இவ்வாறு கூறுவார்.

''சென்னைப் பட்டணத்தில் சி.வை.தா. என்று மகாவித்துவான் இருந்ததாரே, கேள்விப்பட்டதுண்டா? அவர் 'சூடாமணி' என்னும் காவியத்தை அச்சிட்டபோது அதற்கெழுதிய முடிவுரையை யாரைக் கொண்டேனும் படிக்கச் சொல்லியேனும் கேட்டதுண்டா?'' இதன் மூலம் பாரதியார் சி.வை.தா.வின் பதிப்புகளைப் படித்தது மட்டுமல்லாமல் அவற்றின் மீது மிகுந்த மரியாதையும் கொண்டிருந்தார் என்பதும் தெரியவருகிறது.

சி.வை.தா. பதிப்பித்த நூல்களைக் கொண்டும், அவற்றுக்கு எழுதியுள்ள அரிய பதிப்புரைகளைக் கொண்டும் அவர் தம் பதிப்பு முறையை அறியலாம். அவர் எழுதிய பதிப்புரைகள் அனைத்தையும் தொகுக்கப்பட்டு 'தாமோதரம்' எனும் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. பண்டித மணி சி. கணபதிப்பிள்ளை சி.வை.தாவின் பதிப்புரைகள் அவ்வக் காலத்துத் தமிழ்ச் சரித்திரமாய் உயர் வகுப்பு மாணவர்களுக்கு இன்றியமையதனவாய் அமையும் என்று அவர் குறிப்பிட்டிருப்பது பதிப்புரைகளின் முக்கியத்துவத்தை நன்கு தெளிவுபடுத்துகின்றன.

''பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால் கொண்டவர் ஆறுமுகநாவலர். சுவர் எழுப்பியவர் தாமோதரம்பிள்ளை. கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் உ.வே. சாமிநாதஐயர்'' என்று பழந்தமிழ் வெளியீடுகள் பற்றித் திரு.வி.க குறிப்பிடுவது கவனத்தில் கொள்ளத் தக்கது.

 பொதுவாய் ஒருவரைத் தாத்தா என்று அழைத்தால் அவர் தாய் வழித் தாத்தாவாகவோ இல்லை தந்தை வழித் தாத்தாவாகவோ இருப்பார். அப்பிடித் தாய்வழித் தாத்தாவான உ.வே.சா அவர்களை நாம் நன்கு அறிவோம். தந்தை வழித் தாத்தாவாய் இன்னொருவர் இருந்தார்  அவர்தான் "சி.வை.தாமோதரம்பிள்ளை யாழ்ப்பாணத்தில் பிறந்த குற்றத்துக்காக அவர் சரித்திரமாகிய தமிழ்ச் சரித்திரத்தை மறைக்க முயல்வது நன்றிக்கேடு'' என்றும் "தமிழ்தந்த தாமோதரம் பிள்ளை' என்ற கட்டுரையில் சி.கணபதிபிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

 பதிப்புத்துறையில் தொண்டாற்றிய மேற்கண்ட மூன்று அறிஞர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. ஆறுமுக நாவலர் 1868-இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம் உரையைத் தான் ஆய்வுசெய்து தாமோதரம் பிள்ளையைக் கொண்டு பதிப்பிக்கச் செய்துள்ளார்.

 "ஆங்கில மோகம் அதிகரிக்க, தொல்காப்பியப் பிரதிகள் அருகி, தமிழ்நாடு முழுவதிலும் விரல்விட்டு எண்ணத்தக்க அளவில் சுருங்குவதை தாமோதரம் பிள்ளை கண்டார்; கண்ணீர் வடித்தார்...தொல்காப்பியக் கடலில் இறங்கினார்'' என்று பண்டிதர் சி.கணபதிப்பிள்ளை குறிப்பிடுகிறார்.

 தமது 33-ஆம் வயதில் உ.வே.சா., தாமோதரம் பிள்ளையைச் சந்தித்தார். அப்போது உ.வே.சா., சீவகசிந்தாமணியைப் பதிப்பிக்கும் எண்ணம் கொண்டு சுவடிகளை ஆய்ந்து கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு அப்போது அச்சுத்துறை மிகவும் புதியது. தாமோதரம் பிள்ளையின் சந்திப்புதான் உ.வே.சா.வுக்கு அச்சிடும் ஊக்கத்தை அளித்தது. இதை உ.வே.சாவே, "இந்த நூலையும் (சீவகசிந்தாமணி) உரையையும் பின்னும் இரண்டொருமுறை பரிசோதித்தற்கு விருப்புடையனேனும், இவற்றை விரைவில் பதிப்பித்து பிரகடனஞ் செய்யும்படி, யாழ்ப்பாணம் ம.ஸ்ரீ.சி.வை.தாமோதரம்பிள்ளயவர்கள் பலமுறை தூண்டினமையால் விரைந்து அச்சிடுவிக்கத் துணிந்தேன்'' என்று 1887-இல் சீவகசிந்தாமணி முதற்பதிப்பு முன்னுரையில் எழுதியிருக்கிறார்.

 தாமோதரம் பிள்ளை, சிறுவயது முதல் தமது தந்தையாரிடத்திலே வாக்குண்டாம், நன்னெறி, திவாகரம் போன்ற நூல்களைக் கற்றுணர்ந்தார். தொடர்ந்து சுன்னாகம் முத்துக்குமாரக் கவிராயர் என்பவரிடம் நைடதம், பாரதம், கந்தபுராணம் முதலிய இலக்கியங்களையும் மேலும் சில இலக்கண நூல்களையும் பயின்றார்.

 பிள்ளையவர்களின் ஆங்கிலக்கல்வி தெல்லிப்பிழை அமெரிக்க மிஷன் பள்ளியில் தொடங்கியது. மேலும் ஆங்கிலத்தில் உயர்கல்வியை யாழ்ப்பாணம் பல்கலையில் கற்றார். அங்கு கணிதம், தமிழ், ஆங்கிலம், தத்துவம் போன்ற பாடங்களில் முதல் மாணவராய்த் திகழ்ந்தார்.

 ஆங்கில உயர்தரக்கல்வியை எட்டு ஆண்டுகள் பயின்றபின் தமது 20-ஆம் வயதில் கோப்பாயிலிருந்த பள்ளியில் பிள்ளை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அக்காலத்திலேயே நீதிநெறிவிளக்க உரையை அவர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

 சென்னையில் இருந்த பார்சிவல் பாதிரியார் தாமோதரம் பிள்ளையின் தமிழ் அறிவைக் கேள்விப்பட்டு அவரைச் சென்னைக்கு அழைத்து "தினவர்த்தமானி' எனும் இதழின் ஆசிரியராக்கினார். அவ்விதழைச் சிறப்பாக நடத்தி அதில் தனியான ஒரு வசன நடையைக் கையாண்டார் பிள்ளை. மேலும் லஷ்சிஸ்டன்துரை போன்ற ஆங்கிலேயர்க்குத் தமிழும் கற்பித்து வந்தார். இதை அறிந்த அன்றைய அரசாங்கம், தாமோதரம் பிள்ளையை, இன்று மாநிலக் கல்லூரி என்றழைக்கப்படும் அன்றைய "சென்னை இராசதானி' க்கல்லூரியில் தமிழாசிரியராக நியமித்து மகிழ்ந்தார்கள்.

 சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., தேறிய பிள்ளையை கள்ளிக்கோட்டை இராஜாங்க வித்தியாசாலை உதவியாசிரியராகப் பணியாற்ற அழைத்தது. அப்பள்ளியில் பணியாற்றியபோது அவர் பல சீர்திருத்தங்கள் செய்து நிர்வாகத்துறையிலும் சிறந்து விளங்கினார். இதனால் அவருக்கு அரசாங்க வரவு-செலவுக் கணக்குச் சாலையில் கணக்காய்வாளர் பதவியும், அப்பதவியில் காட்டிய திறமையினால் விசாரணைக்கர்த்தர் பதவியும் வந்து சேர்ந்தன. 1871-இல் தாமோதரம்பிள்ளை பி.எல்.தேர்வில் வெற்றி பெற்றார்.

அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் பிள்ளை, 1887-ஆம் ஆண்டில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 4 ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றினார். மேலும் சென்னை திராவிடக் கிரந்த பரிபாலன சபை, நியாயப் பரிபாலன சபை போன்ற அமைப்புகளில் உறுப்பினராகவும் இருந்தார். 

 எப்பணியை மேற்கொண்ட போதிலும் தமது ஓய்வு நேரங்களில் தாமோதரம்பிள்ளை பழைய நூல்களை ஓலைச் சுவடிகளில் பயின்றுவந்தார். அச்சுவடிகள் ஓரம் சிதைந்தும், இதழ் ஒடிந்தும் சீரழிந்து இருந்தன. அச்சுவடிகளைச் சீராக்கி அச்சேற்றிப் பதிப்பிக்க வேண்டியது தமது தலையாய பணி என்று பிள்ளை கருதினார். ஏற்கெனவே தம் 20-ஆம் வயதிலேயே நீதிநெறி விளக்கத்தை அச்சிட்டு வெளியிட்டுள்ளதால், பிள்ளைக்கு இப்பணி சுமையாகத் தோன்றவில்லை. எனினும் எந்நூலையும் நாவலரவர்கள் பரிசோதித்தலே நன்று என்று கருதி அவருக்கே பிள்ளை உதவி செய்து வந்தார்.

 இந்த நெருங்கிய தொடர்பினால் நாவலர் பரிசோதித்து அளித்த சொல்லதிகாரத்தைத் தம் பெயரினால் பிள்ளை முதன்முதல் 1868-இல் வெளியிட்டார். இந்நூல் வெளிவந்து பதினொரு ஆண்டுகள் கடந்தபின் 1879-இல் ஆறுமுகநாவலர் காலமானார். பிள்ளை மிகவும் மனம் வருந்தியதோடு நாவலரின் பணியைத் தாம் தொடர வேண்டுமென முடிவு செய்தார்.

 நாவலரின் மறைவுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்துப் பிள்ளை அரசுப்பணியிலிருந்து விலகி முழுநேரத்தையும் தமிழ்ப்பணிக்கே செலவிடத் துணிந்தார். 

 இது மட்டுமன்றி, கட்டளைக் கலித்துறை, வசன சூளாமணி, சைவ மகத்துவம், நட்சத்திரமாலை முதலிய நூல்களைத் தாமே எழுதி வெளியிட்ட பெருமை பிள்ளைக்கே உரியதாகும். 

மேலும், 
இவர் பதிப்பித்த நூல்களின் எண்ணிக்கை மொத்தம் பதினொன்று. அவற்றுள் இலக்கண நூல்கள் ஏழு. இலக்கிய நூல்கள் நான்கு. இலக்கண நூல்களின் பட்டியலில் வருபவை:
தொல்காப்பியம் - சொல்லதிகாரம் சேனாவரையருரை (1868) 
வீரசோழியம் - மூலமும் பெருந்தேவனார் உரையும் (1881) 
இறையனார் அகப்பொருள் - நக்கீரருரை (1883) 
தொல்காப்பியம் - பொருளதிகாரம் நச்சினார்க்கினியருரை , 3 பகுதிகள் (1885) 
இலக்கண விளக்கம் - (1889) 
தொல்காப்பியம் - எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியருரை (1891) 
தொல்காப்பியம் - சொல்லதிகாரம் , நச்சினார்க்கினியருரை (1892) 

இலக்கிய நூல்களின் பட்டியலில் வருபவை 
நீதிநெறிவிளக்கம் - (1854) 
தணிகைப்புராணம் - (1883) 
கலித்தொகை - நச்சினார்க்கினியருரை (1887) 
சூளாமணி (மூலம் மட்டும்) (1889)

“தமிழ்நாடு முழுவதும் உள்ள தொல்காப்பியப் பிரதிகள் மிகச் சிலவே. அவை யாவும் நான் தேடிக் கண்டவரை சிதிமலடைந்து இருந்தது, இன்னும் சில ஆண்டுகளுக்குள் அழிந்துவிடுமென அஞ்சியே, பயனுடைய வகையில் அச்சிடலானேன்” 

என்று அவர் தனது பதிப்புப் பணி ஆரம்பித்தமை குறித்து தெரிவித்தார்.

முற்காலத்தில் இலக்கியங்கள் பனையோலைகளிலேயே எழுதப்பட்டு வந்தன. சி.வை.தாமோதரம் பிள்ளை அவற்றைத் தேடிக் கண்டெடுத்து, அவற்றை ஆராய்ச்சி செய்து செம்மையான பதிப்புகளை வெளியிடுவதற்கு பெரிதும் சிரமப்பட்டார். அதனை அவரது பின்வரும் வரிகள் தெரிவிக்கின்றன.

“ஏடு எடுக்கும் போது ஓரம் சொரிகிறது. கட்டு அவிழ்க்கும் போது இதழ் முறிகிறது. ஒன்றைப் புரட்டும் போது துண்டு துண்டாய்ப் பறக்கிறது. இனி எழுத்துக்களோ என்றால் வாலுந் தலையுமின்றி நாலா புறமும் சிதிலமடைந்து உள்ளது. பழைய சுவடிகள் யாவும் அழிந்து போகின்றன. எத்தனையோ அரிய நூல்கள் காலப்போக்கில் அழிகின்றன. சீமான்களே! இவ்வாறு இறந்தொழியும் நூல்களில் உங்களுக்கு சற்றாவது கிருபை பிறக்கவில்லையா? தமிழ் மாது நும் தாயல்லவா? இவள் அழிய நமக்கென்ன? என்று வாளாவிருக்கின்றீர்களே! தேசாபிமானம், பாஷாபிமானம் என்று இல்லாதவர் பெருமையும் பெருமையா? இதனைத் தயை கூர்ந்து சிந்திப்பீர்களாக!”

“சொத்தைச் சேர்த்துவிடலாம், எழுத்தைச் சேர்ப்பது எளிதல்ல. மண்ணை அளந்து வரப்புகள் வகுத்துவிடலாம். பொன்னைப் போன்ற எழுத்துகளுக்கு அணைகட்டிப் பார்ப்பது முடியாத காரியம். கடுமையான உழைப்பு மட்டும் போதாது. ஆண்டவன் அருளும் இருந்தால் தான் அடுத்த ஓலை முன் ஓலைக்கு உண்மையாகவே அடுத்த ஓலையாக இருக்கும். இடம் பெயர்ந்து இருந்தால் இலக்கியம் உயிர் புரண்டு நிற்கும்”

மக்கள் பனை ஓலைச் சுவடிகளைப் பரண் மேல் வைத்திருந்தனர் .தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் குறைவு. தெரிந்தாலும் படிப்பார் இல்லை. பாதுகாப்பாரும் இல்லை. இவை போதாவென்று மூட நம்பிக்கையால், வீட்டுப் பரண்களில் கிடக்கும் ஓலைச் சுவடிகளை அள்ளி ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று ஆற்றிலும், பொங்கலுக்கு முதல் நாள் தீயிலும் போட்டு அழித்தனர்.மக்களுக்கோ பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வில்லை; செல்வர்க்கோ உதவ வேண்டும் என்ற மனமில்லை; " துரைத்தனத்திற்கோ அதன் மேல் இலட்சியமில்லை" என்று வருந்தினார் சி.வை.தா.

தமிழ் மொழியும் இலக்கியமும் வாழ்வதற்காக தமது வாழ்க்கையையே அர்ப்பணித்து, தமிழியலாய்வில் பதிப்பு என்ற தனித் துறையையே தொடங்கி வைத்த பெருமை சி.வை.தாமோதரம் பிள்ளைக்கே உரியது. தமிழ் நூல்களைப் பதிப்பிப்பதற்காக, தனது சொந்தப் பணத்தையும் அவர் செலவிட்டிருந்தார். பிறரிடம் கடன் வாங்கியும், பல தமிழ் நூல்களை அச்சேற்றிய கதைகளும் உண்டு. 

தனது பதிப்பில் பிழை கண்டு பிடித்தவர்களைப் பாராட்டி, அவர்களுக்கு பரிசும் அளித்து ஊக்கப்படுத்திய சி.வை.தாமோதரம் பிள்ளை, அடுத்த திருத்திய பதிப்பில் அந்தப் பிழையை திருத்தியும் வெளியிட்டிருந்தார். தமிழ்ப்பதிப்புப் பணியின் பிதமகர் என்றே தாமோதரம் பிள்ளையைச் சொல்லி விடலாம். “இருபதாம் நூற்றாண்டின் தமிழிலக்கிய வரலாற்றில் உ.வே.சாமிநாதைய்யர், சி.வை.தாமோதரம்பிள்ளை ஆகிய இருவரும் போற்றப்படுவதற்கான காரணம் அவர்கள் பதிப்பித்த பழந்தமிழ் நூல்கள் அனைத்திந்திய வரலாற்றுப் பின்புலத்தில் முக்கியமானவையாக அமைவதேயாகும்” என காலஞ்சென்ற பேராசிரியர் கா. சிவத்தம்பி இவர் குறித்து, கருத்துரைத்தார்.

'கட்டளைக் கலித்துறை', 'சைவ மகத்துவம்', 'சூளாமணி வசனம்', 'நட்சத்திர மாலை' ஆகிய நூல்களையும் 'காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி' எனும் நாவல் ஒன்றையும் இயற்றி வெளியிட்டுச் செய்யுள் திறத்திலும், உரைநடை வளத்திலும் ஓங்கு புகழ் பெற்றார். தாமோதரம்பிள்ளையின் செய்யுளில் அமைந்த செறிவை, ஒருமுறை மாயூரம் வேதநாயகம் பிள்ளை படித்துப் பரவசமடந்து,

"நீடிய சீர்பெறு தாமோதர மன்ன, நீள்புவியில் -

வாடிய கூழ்கள் மழைமுகங் கண்டென மாண்புற நீ -

பாடிய செய்யுளைப் பார்த்தின்ப வாரி படிந்தனன் யான்

கோடிப் புலவர்கள் கூடினும் நின்புகழ் கூறலரிதே!"

என எழுதி, பாடலைத் தாமோதரம்பிள்ளைக்கு அனுப்பி வைத்தாராம்.

ஏட்டுப் பிரதிகளைப் படித்து, பரிசோதித்து, பலபடியாக ஆராய்ந்து, வழுவின்றிப் பிரதி செய்கிறபோது. சில சந்தேகங்கள் தோன்றிவிடும். அதனைப் போக்கிக் கொள்ள உரியவர் கிடைக்காது, மன உளைச்சலில் உணவும் கொள்ளாது, உறக்கமும் கொள்ளாது சில நாள்கள் வருந்திக்கொண்டே இருப்பாராம் பிள்ளைவாள்! இலக்கியங்களின் பெயர்களையே தெளிவாக அறிந்திராத காலம் அது. எட்டுத் தொகையில் அடங்கிய எவை எவையெனக் கூடத் தெரியாத காலம். இன்னும் சொல்லப்போனால், 'சிலப்பதிகாரமா', 'சிறப்பதிகாரமா' என மயங்கிக் கொண்டிருந்த காலம். இத்தகைய காலக்கட்டத்தில் ஐயங்களைப் போக்கிக்கொள்ள யார் அகப்படுவர்? எனவேதான் "எனக்கு ஸ்ரீமத் சாமிநாதையரும் அவருக்கு நானுமே சாட்சி!" எனத் தாமோதரம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

 பல பழைய இலக்கியங்களைப் பதிப்பித்தவர் உ.வே.சா. என்று மகிழும் நாம், பல பண்டைய இலக்கண நூல்களைப் பதிப்பித்தவர் சி.வை.தாமோதரம் பிள்ளை என்பதை அறிந்து பெருமைப்பட வேண்டியது தமிழர் கடமை..

உ.வே. சா அவர்கள் சி.வை. தாமோதரனார் இறந்த பொழுது எழுதிய இரங்கற்பா:

"தொல்காப் பியமுதலாந்த தொன்னூல் களைப்பதிப்பித்து
ஒல்காப் புகழ்மேவி யுய்ந்தபண்பின் - அல்காத
தாமோ தரச்செல்வன் சட்டகநீத் திட்டதுன்பை
யாமோ தரமியம்ப வே"

அன்றைய சென்னை அரசு இவருக்கு 1875-இல் ராவ்பகதூர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இவ்வாறு சிறந்த பதிப்புச் செம்மலாக விளங்கியதோடு தமிழ் ஆசிரியராக, கணக்காயராக, நீதிபதியாக, தான் தோன்றிய துறையில் எல்லாம் புகழோடு தோன்றிய பிள்ளை, 1901-ஆம் ஆண்டு தைத்திங்கள் முதல்நாள்,  (ஜனவரி -1) இவ்வுலக வாழ்வை விட்டு மறைந்தார். 

பல்கலைக்கழகங்களும் அரசாங்கமும் பலகாலமாக செய்ய வேண்டிய பெரும் தமிழ்ப்பணியை, தனியொரு மனிதராக நின்று செய்து முடித்தவர் சி.வை.தாமோதரம் பிள்ளை அவர் மறைந்த போதும், அவர் ஆரம்பித்து தமிழ்ப் பதிப்புப் பணி, தனித்துறையாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. பல பழந்தமிழ் நூல்கள் இன்று பலராலும் கற்கப்படுவதற்கும் ஆராயப்படுவதற்கும் ஆதார நிலையாக நிற்பது, தாமோதரம் பிள்ளையின் தியாகம் நிறைந்த பணி என்றால் அது மிகையில்லை.

Thursday, October 21, 2021

ராஜாஜியின் ஜெயில் டைரி

ராஜாஜியின் ஜெயில் டைரியில் ஒரு குறிப்பு...
ராஜாஜி ஜெயிலில் இருந்தபோது Rajaji's 1920 Jail Life" என்று ஆங்கிலத்தில் எழுதினார். அதை "சிறையில் தவம்" என்று தமிழில் திருகூடசுந்தரம் பிள்ளை, சின்ன அண்ணாமலை, தமிழ்ப்பண்ணை பதிப்பக வெளியீடாக மொழிபெயர்த்து வெளியிட்டார். கல்கி வார இதழில் சிறையில் தவம் என்ற நூலை அப்படியே வெளியிடாமல் "ராஜாஜியின் ஜெயிலில் டைரி" என்ற தலைப்பில் சில திருத்தங்கள் செய்தும் தேவையான இடங்களை மறு மொழியாக்கம் செய்தும் மூலநூலுடன் ஒப்பிட்டு பார்த்தும் வாரா வாரம் வெளியிட்டனர். 

ராஜாஜியின் ஜெயிலில் டைரி 1921 டிசம்பர் 21 முதல் 1922 மார்ச் 20 வரையிலான காலகட்டத்தில் தன் சிறை அனுபவத்தை டைரியில் குறிப்பாக எழுதினார். இங்குதான் எனக்கு ஒரு சந்தேகம்  நாட்டிற்காக சிறையில் அடைக்கப்பட்ட சிலர் அங்குதான் தங்கள் சிறை அனுபவத்தை எழுதுகின்றனர். சுயசரிதை எழுதுகின்றனர். கடிதங்கள் நூலாக தொகுக்கப் படுமலவிற்கு எழுதிக் குவித்திருக்கின்றனர்.

காந்தி - சத்திய சோதனை, ராஜாஜி - ஜெயில் டைரி, 
நேரு - இந்திராவிற்கு கடிதங்கள், 
அரவிந்தர் - எனது சிறைவாசம். பெரியார் - சிறையில் இருந்த போது எழுதியவைகள் இவர்களுக்கு எல்லோருக்கும் சிறையில் சில சலுகைகள் கிடைத்தன எழுதுவதற்கு அவற்றை வெளியிலிருப்பவர்களுக்கு அனுப்புவதற்கும்.
இவர்கள் எழுதிய நூலில் இவர்களே கூறியுள்ளார். சிறை சந்தோஷமாகவே இருந்தது...
ராஜாஜி - ராஜாஜியின் ஜெயிலில் டைரி பக். 1 "வெனக்கு வெரும் கடுங்காவல் தண்டனையே..."

அரவிந்தர்  - எனது சிறைவாசம் பக். 3 "...ஆக மொத்தத்தில் சிறைவாச காலம் சந்தோஷமாகவே கழிந்தது..."

ஆனால் வ.உ.சி அவர்கள் மட்டும் சிறையில் செக்கிழுத்து அடிபட்டு நோய்வாய்ப்பட்டு இறந்தார் ஏன்...?

சரி அது போகட்டும் ராஜாஜியின் டைரி குறிப்பில் 1922 ஜனவரி 24 ஒரு குறிப்பை கண்டேன்... நீங்களே படித்து பாருங்கள் சிறையில் என்னவெல்லாம் செய்து இருக்கிறார் என்று...கடிதம் எழுதுதல், சுந்தரகாண்டம் படித்தல், டைரி எழுதுதல்.

Sunday, May 16, 2021

லாக்கப்

லாக்கப்
மு.சந்திரகுமார்
2ஆம் பதிப்பு 2018

தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற உந்துதலால் லாக்கப் நாவலை 
எதிர்ச்சியாக ஓர் இரவில் எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். அந்த லாக்கப் அறையில் நானும் அவர்களுடன் சேர்த்துக் கொண்டேன். சில பக்கங்கள் கடந்ததும் குமார், மொய்தீன், ரவி இவர்களுடன் நானும் எந்த தப்பும் செய்யவில்லை. என்றாலும் ஒவ்வொரு வினாடியும் அவர்களுடன் போலீஸில் 
வாங்கிய அடி உதையால் வலி தாங்காமல் சுருண்டு கிடந்தோம். அப்படியான ஒரு  அனுபவம் இந்த வாசிப்பில் கிடைத்தது. இச் சூழலில் எப்படிப்பட்ட ஓர் உணர்வு தோன்றுமோ அப்படி இருந்தது. அன்று எனக்கு. ஒரு நாளுமில்லாத அளவிற்கு இரவு நீண்டு போனது. வாங்கிய அடி உதைகள் கொஞ்சம் நஞ்சமில்லை. அவ்வளவும் மனதில் ஏற்படுத்திய பாதிப்புகளை எளிதில் கடந்து போக முடியாது. உண்மையில் லாக்கப் 
அப்படியானது தான். சிறையின் அனுபவம் பற்றிய குறிப்பாக இந்த நாவலைக் கடந்து போக முடியவில்லை. வெளியுலகிற்கு இன்னமும் இதுபோல ஆயிரம் கதைகள் சொல்லப்படாமல் மிக இரகசியமாக உள்ளன. மனிதர்கள் ஏன் தவறு செய்கிறார்கள்? சமுதாயம் சொல்லும் ஒழுக்கம் உண்மையில் யாருக்கும் மட்டும் சொல்லப்படுகிறது. காவல் நிலயத்தின் தேவை அல்லது அவசியம் என்ன? மனித உரிமைகள் மீறல்கள் குறித்துப் பேசும் அருமையான நாவல். சகித்துக் கொள்ள முடியாத எத்தனையோ விஷயங்களை இந்நாலில் நீங்கள் வாசிக்கையில் கடந்து போவீர்கள். மூத்திரவாடையும் வியர்வை பிசுபிசுப்பும் பீீீடி புகையுமாக....

ஆந்திராவில் குண்டூரில் வாலாஜா பேட்டை காவல் நிலையத்தில் அப்பாவி நால்வர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டவர்களின் கதை. அப்பாவி தமிழர்கள் அரைகுறை தெலுங்கில் பேசி எதையும் புரியவைக்க முடியாமல் செய்யாத தவறுக்காக அவர்கள் பட்ட துயரம் சொல்லி அடங்காது. உறவுகள் யாருமற்ற அனாதையாக வாழும் இவர்கள் வாழ வழியில்லாமல் ஊரைவிட்டு ஓடிப்போனவர்கள் இவர்கள்.

கடவுள் யாரையும் கை விடுவதில்லை என்று இவர்கள் நால்வரிடம் சென்று கூறினால் சிரித்துக் கொண்டே உங்களைப் பைத்தியம் என்று நினைப்பார்கள்.  வாழ்க்கையில் உண்மையான அனுபவமே கடவுள். அப்படியான அனுபவம் பெற்ற ஒருவன் இந்த நாவலைக் கடந்து பின்னர் உணர்வான். சிறைச்சாலை நமக்கு வேறு உலகத்தையும் வேறு அனுபவத்தையும் கொடுக்கும். எப்படியான மனநிலையில் ஆசிரியர் இதை எழுதும் போது  இருந்ததிருக்க வேண்டும். 

இறைவனால் சபிக்கப்பட்டவர்கள் அனேகமாக இவர்கள் தான் என்று எண்ணத் தோன்றும் படியாக இருக்கிறது.

வாழ்க்கையை வாழ எப்படியெல்லாம் போராட வேண்டி இருக்கிறது அப்பாவி மனிதர்களால். வாழ்வின் எல்லா பக்கங்களிலும் துன்பத்தை வாசித்தவன் அனேகமாக இந்த லாக்கப்பில் இருந்தவனக இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு.

மனதைக் கிழித்துக் கொண்டு வெளியேறும் உணர்வுகளைப்  பெரும்பாலும் இந்த பக்கத்தில் நீங்கள் காணலாம். ஐயோ... அம்மா... அப்பா சார் வலிக்குது எனக்கு எதுவும் தெரியாது. என்ற வார்த்தைகள் நம்மைச் சுற்றி இருக்கும் சுதந்திரத்தை,போலித் தனத்தையும் வாழ்வின் மீதான அவநம்பிக்கை தோல் உரித்து  காட்டிவிடும். நாவல் விசாரணையில் தொடங்கி, ஒரு சமூகத்தின் மீது காட்டமாக விசாரணையை நிகழ்த்த வேண்டும் என்ற மனுவோடு நிற்கிறது.

சாதாரண எளிய மக்களின் பக்கம் நின்று பேச ஒரு வாய்ப்பும் இல்லாத சூழலில் இருப்பவர்களுக்கு எழுத்தைத் 
தவிர உண்மையான ஆறுதலை யாராலும் கூற முடியாது. எழுத்து மட்டும் தான் எளிய மக்களுக்கு இருக்கின்ற ஓரே நம்பிக்கை என்பதை இந்நாவல் உணர்த்துகிறது. வேறு வழியே இல்லை. அதிகாரம் அழுத்தி நசுக்கி வாழ வழி இல்லாத நிலையில் நம்மை  கொண்டு நிறுத்தும் போது எழுத்து ஒன்றுதான் நம்மைக் காக்கும் ஆயுதம்.

மனித உரிமை மீறல்கள் தொடர்கதையாக ஒரு பக்கம் நிகழ, அதைச் சகித்துக் கொள்ள முடியாமல் போராட்டங்களும் இம்மாதிரியான படைப்புகளும் தோன்றுவது காலத்தின் கட்டாயம்.

நாவலை வாசித்து முடித்ததும் பாவம் அவர்கள் என்று சொல்லிவிட்டு மூடி வைத்தேன். வேறு எந்த ஒரு எண்ண ஓட்டங்களும் இன்றி சில மணி நேரம் அதைப் பற்றி மட்டுமே யோசித்துக் 
கொண்டிருந்தேன். லாக்கப் 
மிகக் கொடூரமான இடம். மனித மூளையில் எந்த அறையில் இந்த லாக்கப் அறை உதித்தது என்று யோசித்துப் பார்த்தேன். 

Wednesday, May 12, 2021

டெல்லி புறப்பாடு -8

டெல்லி புறப்பாடு -8

நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். கடவுள் பற்றிய சிந்தனையோடு தனிமையில் அமர்ந்து யோசிக்கும் ஒருவனைப் போல நான் சிதம்பர நினைவுகளை இப்படித்தான் வாசித்துக்கொண்டிருந்தேன்.

இந்த புத்தகம் வாசிக்க எனக்குக் கிடைத்தது என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. நிச்சயம் இதை வாசிக்காமல் நான் கடந்து போயிருந்தால் என்னவோ எனக்குத் தான் இழப்பு அதிகம். ஏதோ ஒரு புண்ணிய பலனால் வாசித்து முடித்துவிட்டேன். இரண்டு நாட்களாகவே எந்த புத்தகத்தையும் வாசிக்க மனம் இடம் கொடுக்கவில்லை. எத்தனை முறை புத்தகங்களைக் கையில் எடுத்துப் புரட்டிக் கொண்டு இருந்தாலும் மனம் எதனுள்ளும் உள்ளே நுழைய மறுத்தது நின்றது. பகல் பொழுது முழுக்க கோடை வெப்பத்தில் களைத்துப் போயிருந்த மனம் இரவில் விழித்து இருந்தது. கையில் எடுத்து வாசிக்கத் தூண்டியது. எங்கிருந்தோ வந்த ஓர் அற்புத உணர்வு. வாசிக்கத் தொடங்கினேன்... வாசிக்கத் தொடங்கினேன்... மீண்டும் வாசித்துக் கொண்டே இருந்தேன்.... 
உள்ளே செல்ல செல்ல ஏதுமற்ற ஒரு மனநிலையோடு நாமே பாதிக்கப்பட்ட ஒரு உணர்வோடு நிகழ்வில் நாமே வாழ்ந்து கொண்டிருப்பது போல ஓர் உணர்வு. சில நேரங்களில் கண்களில் வழியும் நீரை இடது கையால் துடைத்துக் கொண்டு பல நேரங்களில் மூர்ச்சையாகி கனத்த இதயத்துடன் அன்பு செலுத்தியவர்களை விட்டுப் பிரிந்த தருவாயில் உள்ள ஒரு மனநிலையோடு ஒவ்வொரு பகுதியையும் கடந்து செல்கையில் மனம் தனிமையை உணர்ந்தது. ஏதுமற்ற ஒரு சூனியம் தம்மைச் சூழ்வதை உணரமுடிந்தது. 
யாரோ அறையின் கதவைத் தட்டுவது போல் இருந்தது எழுந்து சென்று கதவைத் திறந்தேன். என் அறைத் தோழனின் நண்பன் ஒருவன் வந்திருந்தான். இருவரும் அந்த நள்ளிரவில் வராண்டாவில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். என் கவனம் முழுவதும் இந்த புத்தகத்தின் மீது இருந்தது. சிறிது நேரம் கழித்து அறைக்கு வந்தவன் தன்னுடைய கைப்பேசியை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியில் கிளம்பினான் எங்கு செல்கிறான் என்று எதைப் பற்றியும் கவலை இல்லாமல் அமர்ந்திருந்தேன். மீண்டும் தொடர்ச்சியான வாசிப்பில் நான் மூழ்கிப் போனேன். சட்டென்று கைப்பேசியில் நேரம் பார்த்தேன் இரவு ஒரு மணி. நான் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை எடுத்துக்கொண்டு அறையைப் பூட்டி விட்டு. நூலகத்திற்குச் செல்லலாம் என்று கிளம்பினேன். விடுதியை விட்டு வெளியே வந்ததும் சாலைகளில் நாய்களின் நடமாட்டம் இருந்தது. அந்த இரவில் கையில் ஒரு புத்தகத்துடன் வேகமாக நடந்து கொண்டிருந்தேன் என்னைச் சூழ்ந்த இருளில் சாலையோர விளக்குகள் மஞ்சள் வெளிச்சத்துடன் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. எதிரில் நூலகத்திலிருந்து விடுதியை நோக்கிச் செல்லும் மாணவர்களைப் பார்த்தேன். இந்த நேரத்திற்குச் சென்றால் மட்டும் தான் அங்கு அமர்வதற்கு இருக்கைகள் கிடைக்கும் மற்ற நேரங்களில் எப்பொழுதுமே கூட்டமாகவே இருக்கும். நூலகத்தின் தரைதளத்தில் வந்த பிறகு என் அடையாள அட்டையைக் காண்பித்து உள்ளே சென்றேன். அந்த நள்ளிரவிலும் கூட அமர்வதற்கு ஒரு சில நாற்காலிகள் காளியாக இருந்தன. அதில் போய் அமர்ந்தேன். யாரும் என்னைக் கவனித்ததாகத் தெரியவில்லை ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு புத்தகத்தைக் கையில் எடுத்து விட்ட பக்கத்திலிருந்து வாசிக்கத் தொடங்கினேன் அது மட்டும் தான் நினைவிருக்கிறது. மீண்டும் புத்தகத்தில் மூழ்கிப் போனேன் என்ன வாசித்தேன் என்ன செய்து கொண்டிருந்தேன் எந்த பிரச்சினையும் இன்றி வாசித்த அனுபவத்தைப் பதிவு செய்கிறேன்.
"சிதம்பர நினைவுகள்"

மலையாளம் மூலம்: பாலச்சந்திரன் சுள்ளிக்காடு

தமிழில்: கே.வி ஷைலஜா

யதார்த்த வாழ்வில் காமம், காதல், வலி, பிரிவு, பாசம், மரணம் எனக் கடந்து செல்கையில் இவற்றில் ஒன்றையேனும் வாசிப்பவர் நிச்சயம் வாழ்வில் அனுபவித்து இருப்பார். அதை நாமே நம் மனத்திரையில் காணும்பொழுது ஒருகணம் உயிர் உருகி கண்களில் வெளியே சிந்து விடும் என்று தோன்றும் மனநிலை. எல்லாவற்றையும் கடந்து தன் வாழ்வின் கதையை எழுதுவது அவ்வளவு சுலபமான அல்லது எல்லோராலும் செய்யக்கூடிய காரியமில்லை. இப்படி வாழ முடியுமா? வாழ்ந்த மனிதனை ஒரு நிமிடம் நினைத்தால்... ஐயோ நினைக்கவே கொடுமை... பாலச்சந்திரன் சுள்ளிக்காடு உண்மையில் கவிஞர் மட்டுமல்ல அவர் நம் மனங்களின் மனசாட்சி சில நேரம் நாமே பாலச்சந்திரனாக வாழ்ந்திருக்கிறோம் என்ற ஒரு மனநிலையில் இருக்கும்போது. என்னை உண்மையில் புரட்டிப் போட்டுவிடுகிறது இதை வாசிக்கையில். எந்த ஒரு நூலும் வாசகனை அடித்துப் பிழிந்து துவைத்துக் காயப்போடும் என்றால் அது உண்மையில் மனசாட்சியின் குரலாகத்தான் இருக்கும். அப்படியான படைப்பில் மிக முக்கியமானது "சிதம்பர நினைவுகள்" வாழ்வில் ஒரு முறையேனும் இந்த புத்தகத்தை நாம் வாசித்துக் கடந்து விட வேண்டும். ஏன் என்றால் நம்மால் நம் கதையை இவ்வாறு எழுதும் வாய்ப்பு கிட்டாமல் போகலாம் மேலும் ஒவ்வொரு படைப்பிலும் நம் மனத்தின் பிரதிபலிப்பை நாம் உணர முடியும் என்றாலும் உண்மையில் அதற்கும் ஒரு படி மேலே சென்று நம் ஆத்மாவை மீண்டும் ஒருமுறை புனித நீரில் கழுவி நம்மை மனிதனாக்குகிறது இந்நூல். வாசிப்பவர்கள் ஒரே குரலில் இப்படிச் சொல்வார்கள் மொழிபெயர்ப்பு என்று கூறும் நிலையிலிருந்து விலகி தனித்தன்மையோடு எளிய நடையோடு விளங்குகிறது. மேலும், எல்லா உணர்வுகளையும் ஒரே சீரான எழுத்தில் விரசமின்றி ஆடம்பர கூச்சலின்றி ஒரு காதலன் தன் காதலியை அணுகுவது போல மிக யதார்த்தமாக அழகான அதேவேளையில் அதுவரை அறியாத  ஏதோ ஒரு உணர்வை இம்மொழி பெயர்ப்பில் கலந்து கதையைக் கொண்டு செலுத்தியதை உணரமுடிகிறது. இது இவருக்கு இயல்பாகவே கைவரப்பெற்றுள்ளது. ஷைலஜா மேலும் இப்பணியில் தொடரவேண்டும் அவருக்கு எல்லா நிலையிலும் துணையாக இருப்போம் வாழ்த்துக்கள்.

டெல்லி புறப்பாடு -7

டெல்லி புறப்பாடு -7
மின்விசிறி மிக மெதுவாகச் சுற்றிக் கொண்டிருந்தது. அது ஒரு கோடைக் காலம். அதற்குமேல் தன்னால் சுற்ற முடியாது என்பது போல் மயங்கி கொண்டிருந்தது. நீண்ட நாட்களாகச் சுற்றி வயதாகிப் போன ஒரு வயோதிகனைப் போல் மயங்கி மயங்கிச் சுற்றிக் கொண்டிருந்தது. அறையின் உள்ளே ஜன்னல் கண்ணாடிகளைத் தாண்டி சூரிய வெளிச்சம் எனது அறையில் புதிய வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டிருந்தது. காலை 7 மணி இருக்கும் எழுந்து என்னுடைய கட்டில் மீது அமர்ந்து கொண்டேன். என் அறைத் தோழன் காலையிலேயே வெளியே சென்றிருந்தான் நான் மட்டும் தனியாக அமர்ந்து இருந்தேன். பல் துலக்கிய பின் நடந்து சென்றேன். காலையில் பிரட் அவித்த முட்டை ஒரு டம்ளர் டீ எடுத்துக்கொண்டு மீண்டும் அறைக்கு வந்தேன். சாப்பிட்டு முடித்த பின் மடிக்கணினியை எடுத்து வைத்து நேற்று இரவு தட்டச்சு செய்த கட்டுரையை மீண்டும் ஒரு முறை சரி பார்த்தேன். இன்று மதியம் இரண்டு மணிக்கு நான் கட்டுரை வாசிக்கப் போகிறேன். வாரத்திற்கு இரண்டு நாள் ஒரு நாள் கட்டுரையும் ஒருநாள் புத்தக மதிப்புரையும் நாங்கள் வழங்கவேண்டும். இங்கு அதைப் பற்றிச் சொல்ல வரவில்லை. மதியம் 12 மணி அளவில் என் அறை முழுவதும் வெப்பக் காற்று வீசிக்கொண்டிருந்தது. புழுக்கம் தாங்காமல் வெளியே வந்து நின்று கொண்டேன். மேல் சட்டை எதுவும் அணியவில்லை. கால்சட்டை மட்டும் அணிந்திருந்தேன். சரியாகப் பன்னிரண்டு முப்பது மணிக்குச் சாப்பிடச் சென்ற நான் அதன் பிறகு ஆய்வரங்கு சென்று மாலை நான்கு முப்பது மணிக்கு தான் மீண்டும் அறைக்கு வந்தேன். இதுதான் எனது வாடிக்கை என்றாலும் அன்று மாலை என்றும் இல்லாததாய் ஒரு உணர்வு தனியாக நடந்து கொண்டிருந்தேன். பல்கலைக்கழகத்தின் வளைவுச்சாலையில் நிறையப்பேர் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். நான் மட்டும் தனியாக எதைப்பற்றியும் சிந்திக்காமல் ஏனோ கால் போன போக்கில் போய்க் கொண்டிருந்தேன். அதற்கு முந்தைய நாள் இரவு "ஆடிப் பாவை போல" நாவலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். என்னைச் சுற்றி வெறுமையாய் இருந்த நாள் அன்று. அறைத்தோழன் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டு இருந்தான். மின்விசிறி மயங்கியபடிச் சுழன்று கொண்டிருந்தது. இடையில் கிரீச் கிரீச் என்ற சத்தம் வேறு. எங்கிருந்தோ வந்த ஒரு பதற்றம் என்னை தொற்றிக் கொள்ளவே நான் நாவலில் வாழ்ந்து கொண்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன். நானே சிக்கிக் கொண்டது போல ஒரு உணர்வு. அவ்வுணர்வைப் பற்றி இரண்டு பக்கத்தில் எழுதி வைத்தேன். ஒரு நீண்ட அமைதிக்குப் பின் மீண்டும் நினைவு திரும்பி நாவலை வாசித்துக் கொண்டிருந்தேன். இடையிடையே வீட்டைப் பற்றிய நினைவுகள் மனதை அழுத்தி பாரமாக்கிவிட்டு வந்துபோக வாசிப்பு இடை இடையே அறுபட்டு அறுபட்டு ஒரு வழியாக என் கதையோடு கலந்து அந்த நூலையும் வாசித்து முடித்தேன். அந்த நாவலைப் பற்றி இரண்டு வரிகள் இங்குச் சொல்வது மிக முக்கியம் என்று கருதுகிறேன். இந்தி எதிர்ப்பு போராட்ட காலத்தில் நடந்த ஒரு கதை. என்றாலும் சில நாட்களுக்கு முன்பு வீட்டில் நடந்த ஒரு நிகழ்வு அந்த நாவலிலும் இருந்ததைக் கண்டு வியந்தேன். சிறிது நேரத்தில் நான் மனதளவில் சோர்வாகிப் போனேன். எங்கிருந்தோ வந்த துக்கம் என்னைப் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து சில வினாடிகள் மீளமுடியாமல் அசைவற்று இருந்தேன். அந்த உணர்ச்சியை நிகழ்வை இன்று வரையில் மறக்க முடியவில்லை. வீட்டில் பல பிரச்சனைகள் இருந்தாலும் அவை எதுவும் நிரந்தரமான பிரச்சனை அல்ல என்று எனக்குத் தெரியும். இருந்தும் நூலை வாசிக்கும் போது அது உங்களை மகிழ்ச்சி அடையச் செய்கிறது அல்லது வருத்தமுறச் செய்கிறது அல்லது உங்களுக்கு புதிய உலகத்தைக் காட்டி விட்டுச் செல்கிறது என்றால் அதைவிடச் சிறப்பு வேறொன்றும் இருக்க முடியாது. இதைவிடச் சிறப்பாக ஒரு நாவல் வேற என்ன செய்துவிட முடியும் சொல்லுங்கள். தன்னை சுற்றி அன்பு காட்ட ஒருவர் இல்லாத பொழுது
ஒருவன் காதலில் விழுவதைத் தவிர வேறு வழி என்ன இருக்க முடியும்? இந்த வாழ்க்கையில். காதலிலிருந்து நாம் பெற்றுக் கொள்வது என்பது மறக்க முடியாத நினைவுகளும், ஆறாத காயங்களும், வலிகளையும் தவிர வேற எதையும் அவற்றால் தர முடியாது என்பதை உணர்ந்த தருணத்தில் வாழ்க்கையின் விளிம்பில் நின்று கொண்டிருப்போம். அப்போதைய அந்தப் புரிதல் அந்த அனுபவம் பயனற்றதாகிவிடும். அந்த ஒரு வினாடியில் மரணத்தைத் தழுவி முடிவை எதிர்நோக்கி இருக்கும் ஒருவனின் கடைசி நொடிபோல ஆகிவிடும். பல முறை முயன்றும் மீளமுடியாத புதைகுழிக்குள் மாற்றிக்கொண்டு பிறகு ஞானம் வந்தால் என்ன அறிவு வந்தால் என்ன எல்லாம் மக்கிய குப்பையே. எத்தனை புரிதல் எத்தனை அனுபவம் எல்லாம் வந்த பிறகு எழுதுவதைக் காட்டிலும் வேற எப்படி இதைக் கடந்துவிட முடியும். அதனாலோ என் நினைவுகளின் அடுக்குகளிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து நானே தூசி தட்டி பார்க்கிறேன். எந்த ஒரு வரையறையும் இன்றி முன்பின்னாக நினைவுகளை அடுக்கி எழுதிக் கொண்டே செல்லும் போது எனக்கு நானே நடந்த பல கதைகளைச் சொல்லிக்கொள்கிறேன். மீதமுள்ள வாழ்கையை; முடிந்து போன கதைகளிலிருந்து மீட்டுக் கொள்ள வழி தேடி அலையும் முயற்சியை செய்கிறேன்.

இராமாயணம் புதுப்பார்வை

இராமாயணம் படிப்பதும், ஆராய்வதும் அளவில்லாத ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் என்னுள் ஏற்படுத்துகிறது. என் தாத்தாவின் மூலம் இராமாயணத்தை முதலில் அ...