Monday, April 26, 2021

விருந்தாளி

ஆல்பெர் காம்யு
விருந்தாளி

தமிழில் : க.நா.சு

இந்த கதை 1958இல் பிரெஞ்சு மொழியில் வெளிவந்தது. இதன் ஆசிரியர் 1957யில் இலக்கியத்திற்காக நோபல் பரிசை பெற்றவர்.

மிகச்சிறிய கதை கொலைக்குற்றம் செய்த ஒருவனுக்கும் (அரேபியன்) இந்தக் கதையில் வரும் பால் டுச்சி (போலிஸ்காரன்) மற்றும்  பள்ளி ஆசிரியர் டாரு விற்கும் நிகழும் ஒருநாள் நிகழ்வே கதையாக அமைந்துள்ளது.

ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் போர் பதற்றமான சூழலில் அனைவரும் போர் வீரர்களாகச் செயல்பட வேண்டிய சூழலில் ஒரு பள்ளி ஆசிரியர் எப்பொழுதும் தயாராக இருக்கவேண்டிய சூழல் நிலவக்கூடிய காலகட்டத்தில் நடந்தேறிய கதைக்களம்.

விருந்தாளி என்ற தலைப்பில் ஒரு கைதியின் பயணத்தை அதிலும் ஒரு நாள் நிகழ்வை விவரித்திருப்பது மட்டும் இங்குப் பேசுபொருள் இல்லை.

அக்டோபர் மாதத்தில் பணிபொழியக்கூடிய அந்த சமயத்தில் மக்களின் வாழ்க்கை நிலை எப்படி இருந்தது என்பதை இக்கதை வழி உணர்ந்து கொள்ள முடிகிறது. அதுமட்டுமல்லாமல் கதையின் ஊடே பசி, பட்டினி, பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட அவஸ்தை நினைத்தாலும் தாங்கிக்கொள்ள முடியாதவை.

மிகக் கொடுமையான மனநிலை கொண்ட மனிதர்களாக இருந்தனர் என்பதை வாசிக்கையில் அறியலாம்.

அப்படியான சூழலில் மனிதர்கள் அதைக் கடந்து சென்ற பிறகும் கூட துயரமிகு நினைவுகள் வடுக்களாக மனதில் சுமந்து கொண்டு வாழும் வாழ்க்கை மிகக் கொடுமையானது. அப்படியான வாழ்க்கை இவர்களுடையது.

அதை எண்ணிப் பார்க்கையில் தற்கால சூழல் அவ்வளவு மோசமாக இல்லை என்பதை உணர்ந்து கொண்டு மக்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அன்றாட வாழ்க்கையை நிம்மதிப் பெருமூச்சுடன்  நடத்திக் கொண்டிருந்தனர் என்பதைச் சொல்லாமல் சொல்லிச் செல்கிறார் இக்கதையின் ஆசிரியர்.

கதையில் வரக்கூடிய கொலையாளியான அரேபியன் ஒரு வார்த்தை கூட எங்கும் பேசவில்லை. கொலைக்கான காரணம் முகம் சுளிக்கக் கூடியது. மனிதர்கள் இன்னமும் சிறிய விஷயங்களுக்கு ஒருவரை ஒருவர் வெறுத்து ஒதுக்குவதும் கொலை செய்வதும் அருவருக்கத் தக்க வை டாரு வழி ஆசிரியரின் உள்ளத்தை அறிந்து கொள்ள முடிகிறது.

ஒரு படைப்பாளன் என்பவன் யாராலும் எண்ணிப்பார்க்க முடியாத அல்லது பிரம்மாண்டமான பேசு பொருள்களை மட்டுமே படைக்க வேண்டும் என்று இல்லை. மிகச்சிறிய நுட்பமான தன் அனுபவத்தைக் கூட எழுதலாம். மிகச் சிறிய விடயங்களையும் சிந்தித்துப் படைப்புகளாக உருவாக்கும் போது அதன் வழி உண்மையில் மிகப்பெரிய ஒரு பேருண்மையை இந்த சமூகத்திற்குக் கூறிவிடுகிறான்.

ஆடம்பர இலக்கியங்களைக் காட்டிலும் சமூகத்திற்குத் தேவையான அல்லது சமூக மாற்றத்திற்குத் தேவையான படைப்புகளை எளிய கதைக் களத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்குவதே மிக முக்கியம். அதைத் தவிர்த்து ஆயிரம் பக்கங்கள் விரிந்த வெற்று புனைவுகளைக் காட்டிலும் ஒரு சில பக்கங்களில், ஒரு சில வினாடிகள் தோன்றும் மின்னலின் ஒளியைப் படம் பிடித்துக் காட்டி விட்டுச் செல்வது ஆகச் சிறந்த படைப்பாகும். 

அப்படியான ஒரு ஒளியை விருந்தாளி என்ற கதையில் அந்த தரிசனத்தை முழுமையாக நாம் உணரலாம். க.நா.சு வின் மொழிபெயர்ப்பு அதற்கு பெரும் துணையாக அமைந்திருக்கிறது.

அபி இராவணன்
27.04.2021
12:12 am

நாரத ராமாயணம்

நாரத ராமாயணம்


#புதுமைப்பித்தன்
முதல் பதிப்பு: 1955
கிண்டில் பதிப்பு: 2020

இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் பல பரிமாணங்களில் பல மொழிகளில் பலரால் தொடர்ச்சியாக எழுதப்பட்டும் வாசிக்கப்பட்டும் வந்துள்ளன.

இதுவரை 300க்கும் மேற்பட்ட ராமாயணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன அவற்றில் குறிப்பாகத் தமிழில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட இராமாயணங்கள் கதைகளாகக் காவியங்களாக, நாடகங்களாக, சிற்றிலக்கியங்களாகப் பல பரிமாணங்களில் ராமாயணம் தொன்றுதொட்டு படைப்பாளர்கள் தங்கள் விருப்பப்படி கையாண்டு வருகின்றனர். அதன் வழி இராமாயணம் பலநூறு வடிவங்களில் மக்களிடையே கொண்டு சேர்க்கப்படுகின்றன.

அதில் குறிப்பாகப் புதுமைப்பித்தன் எழுதிய நாரத ராமாயணம் மிக வித்தியாசமான பகடி இலக்கியத்திற்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது.

பகடி இலக்கியம் நக்கலும் நையாண்டியும் ஒரு கேளிக்கை இலக்கியமாகக் கருதப்படுகிறது அதற்கு மிகச் சிறந்த உதாரணம் நாரத ராமாயணம்.

புதுமைப்பித்தன் மனதில் இப்படியான ஒரு வித்தியாசமான கதையை எழுத வேண்டும் என்ற நோக்கத்தின் காரணம் அன்றைய சூழலில் ராமாயணத்தை ஒரு கதையாக மட்டுமல்லாமல் கடவுளின் அவதாரமான ராமனின் சரித்திரத்தையும் இந்திய வரலாற்றையும் பேசுபொருளாகக் கொண்ட இராமாயணத்தை உண்மை வரலாறு போலக் கட்டமைத்த விதத்தை தலைகீழாக மாற்றி அதில் ராமன் சீதை அனுமன் பரதன் சுக்ரீவன் லவன்  முதலிய கதாபாத்திரங்கள் வழி  எதார்த்தமான நையாண்டி தன்மையோடு கூடிய முறையில் பாரதியைப் பின்பற்றியே புதுமைப்பித்தன் நாரத ராமாயணத்தைப் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நாரத இராமாயணம் இந்திய இராமாயணங்களை எள்ளி நகையாடும் தொனியோடு எழுதப்பட்டது மட்டுமல்லாமல் இராமனை ஒரு அடாவடி பேர்வழியாகச் சித்தரித்தும் அனுமனை பாவப்பட்ட ஒருவனாகக் காண்பித்தும் கதையை கூறி இருப்பது கவனிக்க வேண்டியது.

பரதன் சுக்ரீவன் லட்சுமணன்  இவர்களின் வாரிசுகள் போராடி ராம ராஜ்ஜியத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேற்று நாட்டவர்களுடன் போராடி தோற்ற கதையைக் காண்பித்திருப்பது உண்மையில் இலக்கிய அரசியலைப் பேசுவதாக மட்டும் நின்று விடாமல் அதன்வழி பரதகண்டம் ராம ராஜ்ஜியத்தைத் தக்கவைத்துக்கொள்ள வலுவற்ற வாரிசுகளின் தோற்ற கதையையும் பின்பு போராடி வென்ற கதையையும் கேலியும் கிண்டலுமாகக் கதையை அமைத்து இருப்பது வேடிக்கை.

இதுவரையில் இராமாயணத்தை யாரும் இப்படி எழுதி இருப்பார்களா? என்று எண்ணும் அளவிற்குப் புதுமைப்பித்தனின் மொழி நடை, கதை கூறும் முறை, கதையின் தொடக்கம் முதலியன வித்தியாசமான முறையில் அமைந்துள்ளன.

பகடி இலக்கியத்தின் அத்தனை சிறப்பும் நாரத ராமாயணம் பெற்றுள்ளது. இதுபோன்றே பாரதியார் இயற்றிய  குதிரைக்கொம்பு என்ற சிறுகதையும் பகடி இலக்கியத்திற்குச் சிறந்த உதாரணமாகக் கூறலாம்.

தமிழில் நையாண்டி இலக்கியங்கள் பற்றி விரிவான ஆய்வுகளும் கதைத் தொகுப்புகள் முழுமையாக வெளிவந்ததாகத் தெரியவில்லை.

பகடி இலக்கியம் குறித்து ஒரு சிறந்த  கட்டுரையை ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்கள் அந்த காலத்தில் காப்பி இல்லை என்ற தனது நூலில்  எழுதியுள்ளார்.

நையாண்டி பாடல்கள் என்ற தலைப்பில் தனி புலவர்களுடைய பாடல்கள் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது. இந்த இரண்டைத் தவிர விரிவான ஒரு கட்டுரையோ அல்லது ஆய்வு நூல்கள் குறித்த பதிவுகளோ இல்லை.

அபி இராவணன்
26.04.2021

Thursday, April 22, 2021

"நீலப்படம்"

#நீலப்படம்


#லஷ்மிசரவணகுமார்

இரண்டாம் பதிப்பு 2019


நீலப்படம் என்ற "யாருக்கும் சொல்லாத கதை"யைதான் ஆசிரியர் பகிரங்கமாகச் சொல்கிறார்.

நாவலின் பொதுப் புத்தி வரையறையைக் கடந்து இதுவரை பேசப்படாத அல்லது விதிமீறலான அல்லது விதி விலக்கான அல்லது புறநடையான கோட்பாட்டில் எழுதப்பட்ட கதை என்ற  தன்மையில் வைத்துக்கொண்டுதான் அணுக முடிகிறது இந்நாவலை.

எந்த ஒரு சமூகத்திலும் விதிகளும் விதி விளக்குகளும் கலந்தே இருக்கும். அதுவே அச்சமூகத்தின் இயல்பாகும். அப்படியான  விதி விலக்குகள் வகுக்கப்பட்டாலும் அவை வழக்கில் ஒதுக்கி வைக்கப்பட்டாலும் அவை மையமானதாக இருந்ததில்லை. அப்படியான சமூகத்தில் தொலைந்து போன பலநூறு கதைகளில் நீலப்படமும் ஒன்று.

தனிமனித அந்தரங்க வாழ்க்கை என்பது அந்த சமூகத்தின் உண்மையான முகம் என்று கூறலாம்.

அப்படியான அந்தரங்க கதைகள்தான்  உண்மையின் மிக அருகாமையில் இருக்கக்கூடிய கதைகள். இச்சமூகத்தின் தோலை உரித்துக் காட்டக்கூடிய முதன்மையான ஒன்றாகும்.

தன்வரலாறுகள் பெரும்பாலும் அந்தரங்க வாழ்கையை அவ்வளவு எளிதில் படம் பிடித்துக் காட்டுவதில்லை. அதன் சுயத்தை வெளிக்காட்ட அனுமதிப்பதில்லை. இதிலிருந்து விதி விலக்கான நீலப்படம் பட்டை தீட்டப்படாத ராவான ஒரு கதை. உண்மையில் ஒரு பெண்ணின் அந்தரங்க கதை. அதில் அவள் தன்னை மறைக்கவோ புனிதமாக் காட்டவோ இல்லாமல் இயல்பான மனநிலையை வெளிப்படையாக தன் உடலைப் போலவே உள்ளதை உள்ளபடி காட்டிவிட்டு  இச் சமூகத்தின் முகத்திலும் பார்வையிலும் காரி உமிழ்ந்துவிட்டுச் செல்கிறாள்.

நீலப்படம் தற்கால திரைத்துறையின் கதையை பேசுவதாகவும் அதே சமயத்தில் திரைமறைவில் பெண்கள் மீது இச்சமூகம் நடத்திய அல்லது நடத்திவரும் வன்முறையை, வன்மத்தை அப்பட்டமாகப் பேசக்கூடிய நாவலாக எழுந்துள்ளது.

இக்கதையில் வரும் ஆனந்தி; சத்யா என்ற பாப்பு போன்ற மனுஷிகள் இன்னுமும் பாபு போன்ற மிருகங்களிடம் சிக்கிக்கொண்டு மீள முடியாமல் அகப்பட்டு நசுங்கி மூச்சுத்திணறியே அன்றாடமும் போராட்டத்துடனே வாழ்கையை கடத்தி வருகின்றனர் என்பதற்கு உதாரணமாக நீலப்படத்தைக் கைகாட்டலாம். என்றாலும் பெண்ணின் இருப்பையும் அவளின் வலிமையையும் நிலை நாட்ட முடியும் என்றும் காட்டியுள்ளார் நாவலாசிரியர்.

லஷ்மி சரவணகுமார் உண்மையில் அதி அற்புதமான கதையை மிக நேர்த்தியாக வரைந்துள்ளார். கயிற்றில் நடப்பதுபோல மிகக் கவனமாக இந்நாவலைப் படைத்துள்ளார். சிறிய கவனக்குறைவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

ஒரு படைப்பாளியின் சமூக அக்கறையை இதைவிடச் சிறப்பாக வெளிக்காட்டிவிட முடியாது.

கதைக் களம் மிகச் சுவாரஸ்யமான ஒன்று. இதை வாசிக்கையில்  இம்மாதிரியான படைப்புகளை அங்கிருந்து அதை வளர்த்தெடுக்க வேண்டிய கடமை இச்சமூகத்திற்கு இருக்க வேண்டும். நம் சமூகம் உண்மையில் உயர்வடைய ஒருவழி உண்மையை உயர்த்தி பிடிப்பது மட்டுமே.


அபி இராவணன்

22.04.2021

11.38 pm

Sunday, April 18, 2021

கடுகு வாங்கி வந்தவள்

"கடுகு வாங்கி வந்தவள்" 
கன்னடத்தில் பி.வி.பாரதி 
தமிழில் கே. நல்லதம்பி 

ஒரு எழுத்தாளனின் சமுகம் சார்ந்த அக்கறை அல்லது நோக்கம் என்பது மிக முக்கியமான ஒன்று. துன்பங்களில் சுழன்று திக்குத் தெரியாமல் அலைந்து கொண்டிருக்கும் சாதாரண மனிதர்களுக்கு அவர்கள் வரமும் வழிகாட்டியும் ஆவார்கள்.
அப்படியானதொரு அனுபவப் பதிவை நாவல் வடிவில் இச்சமுகத்திற்குக் கொடுத்திருப்பவர் தான் பி.வி. பாரதி.

புற்றுநோய் என்ற உயிர்க்கொல்லி நோயிலிருந்து மீண்ட ஒரு பெண்ணின் கதை. அந்த நோய் கொடுத்த வலி வேதனை சொல்லில் அடங்காத இன்னும் சொல்லமுடியாத துன்பங்களைத் துயரங்களை வாழ்வில் மிக இக்கட்டான சூழல்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்வதன் மூலம் இதுபோன்ற கொடுமையான சூழலில் சிக்கித் தவிப்பவர்களை அல்லது அப்படியான மனிதர்களை நாம் காணும் போது? எப்படி அணுக வேண்டும்? அவர்களின் மன உணர்வுகளை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? என்பதை உணர்த்தும் கதையே இந்நாவல். 

வாழ்வில் அதுவரையில் சந்திக்காத ஒரு புதிய அனுபவத்தை ஒரு நோய் மூலம் நாம் பெரும் பொழுது நம்மைச் சுத்தி இருக்கக்கூடிய இந்த வாழ்க்கை, மனிதர்கள், உறவுகள், இவர்களைப் பற்றிய புரிதல்கள் அனைத்தும் தலைகீழாகத் தோன்றலாம். நம் மனதில் கொண்டிருந்த தானென்ற அகம்பாவம் அதுவரை தன்னால் மட்டுமே எல்லாம் நடக்கிறது என்ற நினைப்பு என எல்லாவற்றையும் ஒரு நொடியில் தவிடுபொடியாக்கி வாழ்க்கை என்றால் என்ன என்று புரிய வைப்பதோடு, இயல்பாக நடக்கக் கூடிய சாதாரண ஒன்றைப் பல போராட்டங்களுக்குப் பிறகு நாம் அதைச் செய்கிற சமயத்தில் வாழ்தல் என்றால் என்ன? என்று புரிந்து கொள்ளும் அந்த ஒரு வினாடியில் ஒரு புதிய மனிதனை உங்களால் காண முடியும் அந்த மனிதனைத் தேடி அடைவதே வாழ்வின் மிக உன்னதமான ஒன்று. 

அதிலும் குறிப்பாக ஒரு பெண்ணாக இருந்து அந்த துன்பங்களை அனுபவித்த பின் வாழ்வில் இதைவிடக் கொடுமையான வலிகள் உண்டோ? என்று கூறுமளவிற்கு மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் வலிகளை அனுபவித்த ஒருவரால் அதை மீண்டும் மனதில் அசைபோட்டுப் பதிவு செய்து அதை ஒரு படைப்பாக மாற்ற எடுத்த முயற்சி சாதாரண ஒன்று அல்ல அது மன வலிமையின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்நாவலை ஒரே மூச்சில் வாசித்து விட உதவியாக இருந்தது மொழிநடை உண்மையிலேயே எப்படிப்பட்ட உன்னதமான கதையாக இருந்தாலும் அதனுடைய மொழிநடை கூறும் முறை கடினமாக இருந்தால் வாசிப்பில் ஒரு சோர்வு தொய்வு ஏற்படும். இந்நாவலில் எந்த இடத்திலும் அப்படியான ஒரு தொய்வோ சோர்வோ ஏற்படாத வண்ணம் கொண்டு சென்றிருப்பது ஒரு மொழிபெயர்ப்பாளரின் சிறந்த வெற்றியாகவே கொள்ள வேண்டும்.

இலக்கியம் என்பது மனித வாழ்க்கையைச் சொல்லில் வடிப்பது என்பார்கள். அந்த சொல்லை மிகச் சிறந்த முறையில் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குக் கடத்திச் செல்வது ஒரு பெரும் தவம் போன்றது. அதில் வெற்றியும் கண்டுள்ளார் மொழிபெயர்ப்பு ஆசிரியர். நூலாசிரியரின் மனநிலையை வலியை நூலின் நோக்கத்தை எந்த நிலையிலும் குறைத்து விடாமல் பிறிதொரு மொழியில் கொண்டு சேர்ப்பது ஒரு ஆகச் சிறந்த கலையாகவே கருதுகிறேன். அந்த கலையில் கை தேர்ந்தவரான கே.நல்லதம்பியை எத்துணை பாராட்டினாலும் தகும். இதற்கு முன்னால் இவரின் சில மொழிபெயர்ப்புகளை வாசித்த அனுபவத்தில் இதைச் சொல்ல எந்த தடையுமில்லை எனக்கு.

# அபி இராவணன்
19.04.2021
3:07 am

Saturday, April 17, 2021

உலோகம்

"உலோகம்" 

நாவல் வெளிவந்த ஆண்டு 2010.

2021யில் வாசிக்கையில்...

ஒரு சமயம் ஜெயமோகன் பேசக்கூடிய காணொளிக் காட்சி ஒன்றைத் தற்செயலாக பார்க்க நேர்ந்தது. அதில் ஈழத்தில் நடந்த போர் குறித்து அவர் பேசி இருந்த கருத்துக்களில் உடன்பாடு இல்லையெனினும் ஈழப்போரைப் பின்னணியாகக் கொண்டு அவர் எழுதிய நாவலை அதுவே வாசிக்கத் தூண்டியது. வாசிப்பின் முடிவில் தான் கொண்ட பார்வையை எந்த இடத்திலும் சரியானது என்று வாதிடவுமில்லை ஈழப்போர் தவறு என்று பேசவுமில்லை அதுவரையில் மகிழ்ச்சி. 

இந்த இடத்தில்தான் எழுத்தாளன் ஒரு உன்னதமான இடத்தைப் பெறுகிறான். குறிப்பாக இந்நாவலில் ஜெயமோகன் அந்த உன்னதமான நிலையைத் 
தொட்டு விட்டார் என்று என்னால் கூற இயலும்.

நேர்த்தியான கதையின் தொடக்கமும் முடிவும் எதிர்பாராத ஒன்றாகவே அமைகிறது. வாசகனால் உணரமுடியாத முடிவைச் 
சென்றடையும் பொழுது அந்தப் படைப்பு மேலும் சுவாரசியம் அடைகிறது.

நாவலில் ஈழத்து இயக்கங்கள் பற்றி தன் பார்வையையோ அல்லது பொது பார்வையையோ முன்வைக்காமல் நடந்த ஒன்றை அல்லது கற்பனை கதையைக் கதையாகவே சொல்லும் இயல்பு மாறாமல் எந்த சார்பும் இல்லாமல் அப்படியே கொண்டு சென்றிருப்பது வியப்பை அளிக்கிறது.

மனிதர்களின் மனதில் எழும் உணர்வுகளை அவர்களின் வாழ்க்கைச் சூழலை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு அதை அப்படியே கதையினூடே செலுத்தி எந்த இடத்திலும் இடர்பாடு இல்லாமல் இட்டுச் செல்வது சிறந்த எழுத்தாளனுக்கு அடையாளம் அந்த அடையாளத்தை இந்நாவல் நிறைவடையும் வரை ஜெயமோகன் தக்க வைத்துள்ளார்.

சார்லஸ், ஜார்ஜ், ரெஜினா, வீரராகவன், சிறீ மாஸ்டர், பொன்னம்பலத்தார், வைஜயந்தி இன்னும் சில கதாபாத்திரங்களில் மிக முக்கியமான கதாபாத்திரம் சார்லஸ் என்ற சாந்தன் அதுவும் அவன் பெயர் இல்லை. 

இக்கதையில் ஐந்து விடயங்கள் பேசப்பட்டுள்ளன ஒன்று இயக்கங்கள் இரண்டு தனி மனித உணர்வுகள் மூன்று அரசியல். நான்கு சமூகத்தின் நிலை ஐந்து வரலாறு என்ற போலித்தன்மையின் கட்டமைப்பு. 

இங்குச் சுட்டிக் காட்ட வேண்டிய மிக முக்கியமான ஒன்று கதைகூறல் முறை அதிலும் வெற்று வார்த்தைகளின் அடுக்குகளாக அல்லாமல் கனத்த பக்கங்களைக் கொண்டதாக அமைகிறது இந்த நாவல்.

இயக்கத்திற்காக இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்ற வியப்பும் அகதிகளின் மனநிலையில் நாம் ஒரு நிமிடம் வாழும் பொழுது எவ்வளவு கொடுமைகளை அனுபவித்து இருக்கிறார்கள் எண்ணும் அளவிற்கு இந்நாவலை வாசிப்பவர்கள் உணர முடியும். இங்கு எந்த நியாய தர்மங்களும் பேசப்படவில்லை எனினும் இயக்கங்களின் முடிவு எதுவோ அதுவே கதையின் முடிவாக அமைந்துள்ளது.

கதையில் வேண்டுமானால் ஹீரோக்களைஉருவாக்கலாம் தலைவர்களை உருவாக்கலாம் ஆனால் நிகழ்வில் தலைவர்களோ ஹீரோக்களோ அப்படி அல்ல.

அப்படி இக்கதையின் ஹீரோவாக சார்லஸ் காட்டப்பட்டாால் அல்லது பொன்னம்பலத்தார் கதையின் தலைவராகக் கூறப்பட்டிருந்தால் இதனுடைய உண்மை தன்மை இயல்பிலிருந்து ஒருபடி கீழே இறங்கி இருக்கும். ஆனால் மிகத் தெளிவாகக் கதையை இட்டுச் சொல்வதோடு கதாபாத்திரங்களின் இயல்பை இக்கதையில் காணலாம்.

நிச்சயம் ஜெயமோகனைத் தவிர வேறு எவரேனும் இந்த கதையை எழுதியிருந்தால் சார்லசை அல்லது பொன்னம்பலத்தாரை மிக உன்னதமான ஒரு அறிவுஜீவியாகவும் மிகப்பெரும் தலைவராகவும் ஆக்கியிருக்க முடியும் ஆனால் இக்கதையின் உண்மைத்தன்மையை நிலைநாட்ட அப்படி எந்த ஒரு அதிமேதாவி தனத்தையும் ஜெயமோகன் நிகழ்த்திக் காட்டவில்லை. அதுதான் பிற எழுத்தாளர்களிடமிருந்து ஜெயமோகன் தன்னை விடுவித்துக் காட்டும் இடம் என்று நான் கருதுகிறேன்.

இயக்க கட்டுப்பாடுகளை பற்றி கூறுகையில் வியப்பை அளிப்பதாக இருக்கிறது. இப்படியாக ஒரு இயக்கத்தின் கீழ் கட்டுப்பாடுகளோடு இருக்கமுடியுமா? என்று எண்ணும் பொழுது சாதாரண மக்கள் அனுபவங்களிலிருந்து இதைப் புரிந்துகொள்வது சாத்தியமில்லாத ஒன்று.

இக்கதையில் உள்ள அனுபவங்கள் உண்மையில் மெய்சிலிர்க்கக் கூடியவை துரோகம் ஏமாற்றம் கொலை கொள்ளை கடத்தல் இதற்கு இடையே காமம் காதல் நட்பு எல்லாவற்றையும் கடந்து இயக்கம் என்ற ஒற்றைச் சொல் அனைத்தையும் கடந்து நிற்கும்.

வாசிப்பின் அனுபவத்தைப் பெற எழுத்தாளனின் எழுத்தாற்றலை அறிய எழுத விரும்பும் எவரும் வாசிக்க வேண்டிய மிக முக்கியமான ஒரு படைப்பாக உலோகம் என்ற நாவலைக் கூறலாம்.

உலோகம் வெற்று வார்த்தை அல்ல வாழ்வின் அழிக்கமுடியாத நினைவுகளில் ஒன்றாக ஆகிப்போன ஒருவனின் கதையே இந்த உலோகம் ஆகும்.

இராமாயணம் புதுப்பார்வை

இராமாயணம் படிப்பதும், ஆராய்வதும் அளவில்லாத ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் என்னுள் ஏற்படுத்துகிறது. என் தாத்தாவின் மூலம் இராமாயணத்தை முதலில் அ...